சூர்யா நடிப்பில், ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படத்துக்கு ‘சீன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்தப் படம் ‘சூர்யா 47’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வந்தது.
போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்திருக்கும் இந்தப் படத்தில், பிரேமலு நஸ்லென், நஸ்ரியா, ஜான் விஜய், ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த 2025 டிசம்பரில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு 2026 ஜூலையில் நிறைவடைந்தது. படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் படத்தின் டைட்டில் டீசரையும், வெளியீட்டுத் தேதியையும் படக்குழு இன்று அறிவித்துள்ளது.
1.20 நிமிடம் ஓடும் இந்த டைடடில் டீசரில், ஒவ்வொருவராக சட்டங்களுக்குள் அடங்காத டிஎஸ்பி இன்பராஜ் பற்றி நல்லதும் கெட்டதுமாக சொல்கிறார்கள். ஒரு குற்றவாளியிடம் இன்பராஜ், ‘உன்ன கைது செய்த ஒரே போலீஸாக நான் இருக்கலாம்; ஆனா நான் கைது பண்ணின 999 கைதிகள்ல நீயும் ஒருத்தன்’ என வசனம் பேசுகிறார்.
இந்தப் படத்தை ழகரம் ஸ்டூடியோஸ் சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் தயாரித்துள்ளனர். ஜெய்ஸ்ரீ தாமோதரன் இணைந்து தயாரித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை வினீத் அகஸ்டினும், படத்தொகுப்பு பணியை அஜ்மல் சாபு மேற்கொண்டுள்ளனர். படத்துக்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் தீபாவளிக்கு முந்தைய வார இறுதியில், நவம்பர் 6-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.