ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு ‘சீனு’ என தலைப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஆகஸ்ட் 14-ம் தேதி ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இதனை ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் சூர்யாவே தயாரித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு ‘சீனு’ என தலைப்பிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன் போடுவது என்று பேச்சுவழக்கில் சொல்வதையே தலைப்பாக ‘சீனு’ என்று வைத்துள்ளார்கள். இதில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ள இப்படத்தினை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. இசையமைப்பாளராக சுசின் ஷ்யாம், எடிட்டராக அஜ்மல் சாபு உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். இதன் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணிபுரிந்துள்ளார் பிரபல யூடியூபரும், நடிகருமான திராவிட் செல்வம்.