‘ரஜினி 173’ படத்தில் ரஜினிக்கு மகனாக பாசில் ஜோசப் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்தினை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரஜினி. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இப்படத்தில் ரஜினிக்கு மகனாக பாசில் ஜோசப் நடிக்கவிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு படக்குழு தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் இது உண்மையாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘ராவடி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார் பாசில் ஜோசப். இந்நிலையில் அவர் தமிழில் நடிக்கவுள்ள பெரிய நாயகரின் படமாக ‘ரஜினி173’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளத்தில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர் பாசில் ஜோசப். ‘மின்னல் முரளி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, பெரிய பொருட்செலவைக் கொண்ட படமொன்றை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் பாசில் ஜோசப்.