‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இருக்கிறது. இதனை கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
அக்ஷய் குமார் நாயகனாக அறிமுகமான படம் ‘சிறை’. அப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஒகேனக்கலில் நடைபெற்றது.
தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது. மேலும், இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. எல்.கே.அக்ஷய் குமாருடன் பாசில் ஜோசப், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார்.
இதன் ஒளிப்பதிவாளராக லியோன் பிரிட்டோ, இசையமைப்பாளராக ஜென் மார்ட்டின் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து இப்படத்தினை உருவாக்கியுள்ளது படக்குழு. தற்போது ‘ராவடி’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.