“விஜய் முதல்வராக தமிழகத்தின் ஜனநாயகனாக பதவியேற்றதால் ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தமானதாக உணர்கிறேன்” என்று தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தெரிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. தணிக்கை பிரச்சினையால் இப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. தற்போது தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் ‘ஜனநாயகன்’ வெளியீடு குறித்து கூறும்போது, “’ஜனநாயகன்’ படம் ‘மாண்புமிகு முதலமைச்சர்’ என்ற அடைமொழியுடன் வெளியாவதாக அமைந்திருக்கிறது.
விஜய்யுடன் இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். மக்கள் அவரைக் கொண்டாடுவதற்காகவே திரையரங்குக்கு வருகிறார்கள். அவர் முதல்வராக பதவியேற்றதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். திரையில் நாயகனாக இருந்து, நிஜ வாழ்க்கையில் நாயகனாக அனைத்து தடைகளையும் மீறி மக்களின் ஆணையைப் பெற்றது ஓர் உண்மையான வரலாற்றுத் தருணம். ஒவ்வொரு குடும்பத்தில் ஒரு விஜய் ரசிகர் இருந்தால் ஆச்சரியப்பட மாட்டேன்.
அவர் முதல்வராக தமிழகத்தின் ஜனநாயகனாக பதவியேற்றதால் ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தமானதாக உணர்கிறேன். டிசம்பர் மாதத்தில் தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம். தற்போது மறு ஆய்வுக் குழு படத்தைப் பார்த்திருக்கிறார்கள். விரைவில் சான்றிதழ் கிடைத்து, படத்தை திரையரங்கில் வெளியிட ஆவலாக இருக்கிறோம். முன்பே வெளியிட அனைத்து முயற்சிகளும் எடுத்து, தற்போது முதல்வரானவுடன் வெளியாவது விதிவசமாக அமைந்தது போல உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் வெங்கட் நாராயணா.