கோப்புப் படம்
சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியாகி ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் திரையிடலாம், மேலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள், உள்ளூர் பண்டிகை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி முதல்வர் விஜய் உத்தவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திரைப்படத் துறையினர் முதல்வர் விஜய்யை மே 16 அன்று சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் 'C' படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி, அதாவது நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள், மாவட்டத்தைப் பொறுத்தளவில் உரிமம் வழங்கும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகரத்தைப் பொறுத்தளவில் மாநகர காவல் ஆணையரால் அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், புதிய திரைப்படம் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் மற்றும் உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் அரசு மற்றும் உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதி தனியாக பெறத் தேவையில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.