சென்னை: “சினிமா என்றால் பாரதிராஜா; பாரதிராஜா என்றால் சினிமா என்கிற அளவுக்கு நமது மனதில் பதிந்துள்ளார். காலத்துக்கும் இது அப்படியே இருக்கும்” என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “என் இனிய தமிழ் மக்களே என்ற அந்த கம்பீரக் குரலை நாம் இனி எப்படி கேட்போம்? இப்படி ஒரு நாள் நாம் அழுதே தீருவோம் என தெரியும். ஆனால் இந்த அழுகை எப்படி தீரும்?
வாரிசு அரசியல் பற்றிய விமர்சனங்கள்தான் இருக்கும். ஆனால் 1977-களுக்கு பிறகு வாரிசு சினிமாதான். ஒரு குழந்தைக்கு அப்பாவின் சாயல் இருக்கிறதா என பார்ப்பார்கள். அதைப் போல 1977-களுக்கு பிறகு வந்த இயக்குநர்களுக்கு பாரதிராஜாவின் சாயல் தவறாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சினிமா சமூகத்தையே உருவாக்கியவர் அவர்.
நான் நேரடியாக பாரதிராஜாவிடம் பணிபுரியவில்லை, இருப்பினும் பாக்கியராஜிடம் பணிபுரிந்துள்ளேன். எனது அப்பா இறந்தபோது என்ன அழுகை வந்ததோ, அதைவிட அதிகமாக இவரின் மறைவு இருக்கிறது. ஆனால் இது தவிர்க்க முடியாதது.
சினிமா என்றால் பாரதிராஜா; பாரதிராஜா என்றால் சினிமா என்கிற அளவுக்கு நமது மனதில் பதிந்துள்ளார். காலத்துக்கும் இது அப்படியே இருக்கும். அவரின் மறைவு ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரின் சினிமா சரித்திரத்தில் இந்த 50 ஆண்டுகள் என்பது பொற்காலம்” என்று அவர் கூறினார்.