தமிழ் சினிமாவில் காலம் காலமாக தாயின் தியாகம் எப்போதும் மிக உன்னதமான ஒன்றாக, புனிதமானதாகவே காட்டப்பட்டு வந்துள்ளது. தாயும் ஒரு பெண் என்பதையும், அவருக்கென்று ஒரு வாழ்க்கை, உணர்வுகள் உண்டு என்பதை பதிவு செய்த படங்கள் வெகு சொற்பம். ‘சொல்லாமலே’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ போன்ற தனித்துவமான கதைக்களங்கள் மூலம் முத்திரை பதித்த சசி, தற்போது 'நூறு சாமி' மீண்டும் ஒரு தனித்துவமான கதைக்களத்துடன் வந்துள்ளார்.
கணவனை இழந்த செல்வி (சுவாசிகா), தனது இரண்டு மகன்களான பாஸ்கர் (அஜய் திஷன்) மற்றும் விவேக் (சக்தி) இருவரையும் தனியொரு பெண்ணாக போராடி வளர்க்கிறார். ஊரில் இருக்கும் ஆண்கள் பலரும் தவறான எண்ணத்துடன் செல்வியை நெருங்க முயல்கின்றனர். இந்தச் சூழலில் செல்விக்கு மறுமணம் செய்வது குறித்து ஆசிரியர் ஒருவர் பாஸ்கரிடம் பேசும்போது, அது அவனுக்கு கசப்புணர்வையே தருகிறது. செல்விக்கு அதில் விருப்பம் இருந்தாலும், காலப்போக்கில் அதை அப்படியே மறந்துவிடுகிறார்.
வளர்ந்த பிறகு பாஸ்கருக்குள் ஏற்படும் மனமுதிர்ச்சி தன் தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் மகனின் இந்த விருப்பத்தை கேட்டு அதிர்ச்சியடைகிறார் சுவாசிகா. ஆனாலும் விடாப்பிடியாக தன் தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்ற பாஸ்கரின் எண்ணம் நிறைவேறியதா என்பதே ‘நூறு சாமி’ படத்தின் மீதிக் கதை.
கணவனை இழந்த 43 வயது பெண் ஒருவர், தன் பிள்ளைகளுக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த சமூகத்தில், ஒரு பெண் என்பவள் வெறும் தாயாக மட்டுமே இருக்க வேண்டுமா? அவளுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக் கூடாதா என்ற மிக முக்கியமான கேள்வியையும், கணவரை இழந்தவரின் மறுமணத்தையும் மையமாக வைத்து இயக்குநர் சசி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது கூடுதல் சிறப்பு.
ஒரு சீலிங் ஃபேனை செல்வியின் மறைந்த கணவனுக்கான ஒரு குறியீடாக பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். படத்தில் வரும் புத்திசாலித்தனமாக காட்சி இது. செல்வியின் கணவர் எப்படி இறந்தார் என்பது நமக்கு நேரடியாக சொல்லப்படவில்லை என்றாலும், அவர் அந்த ஃபேனிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று நமக்கு உணர்த்தப்படுகிறது. எனினும் இந்தக் காட்சியை சோகம் பிழிய சொல்லாமல் மிக இயல்பாக சொல்லிவிட்டு அடுத்த காட்சிகளுக்கு நகர்ந்து விடுகிறது திரைக்கதை.
அதேபோல படம் முழுக்க முடிந்தவரை தேவையற்ற நாடகத்தனங்கள் இன்றி மிக இயல்பாகவே கதை நகர்கிறது. பள்ளி ஆசிரியர் ஒருவர் (அருள்தாஸ்) செல்வியின் மகனிடம் தன்னுடைய மறுமணம் குறித்து பேசுவதை செல்வி மறைந்து நின்று கேட்பது படத்தில் வரும் மற்றொரு உணர்வுபூர்வ காட்சி. படத்தின் முதல் பாதி முழுக்க, செல்வியின் மறுமண விருப்பத்தை அவரது மகன்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள், அதை எப்படி தங்களுக்குள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை விவரிக்கிறது. இரண்டாம் பாதி, இந்த திருமணத்தை எதிர்க்கும் உறவினர்கள், கிராமத்து மனிதர்களுக்கு எதிராக அந்த மகன்கள் எப்படித் தன் தாய்க்காக அரணாக நின்று போராடுகிறார்கள் என்பதை பேசுகிறது.
படத்தின் நெகிழ்ச்சியான தருணங்கள் இருந்தாலும் திரைக்கதையில் சில இடங்களில் தடுமாற்றங்களும், குறைகளும் இல்லாமல் இல்லை. உதாரணமாக சில இடங்களில் இது சீரியஸ் படமா அல்லது ஃபீல் குட் படமா, நகைச்சுவை படமா என்ற குழப்பம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் வருகின்றன. ஒரு காட்சியில் கருணாஸ், செல்வியின் மகன்களிடம் அவர்களுடைய திருமணம் குறித்து பேசிக் கொண்டிருப்பார். கலகலப்பாக சென்று கொண்டிருந்த அந்தக் காட்சி திடீரென சீரியஸ் மோடுக்கு சென்று முடிகிறது.
இதுபோல திடீர் மாற்றங்களை பல இடங்களில் உணர முடிகிறது. அதற்கு முக்கிய காரணமாக பின்னணி இசையை சொல்லலாம். ஏனெனில் காட்சிகளின் வழியே கதாபாத்திரங்களின் உணர்வுகளை இயக்குநர் சொல்ல முயலும்போது பின்னணி இசை அதற்கு எவ்வளவு முட்டுக்கட்டை போட முடியுமோ அவ்வளவு போடுகிறது. இதனால் கதாபாத்திரங்களின் மனநிலையை நாம் உள்வாங்கிக் கொள்ளும் சூழல் உருவாகவில்லை. இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் கதைக்களத்தின் கனத்தை உணர்ந்து பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
படத்தின் போஸ்டர்களில் விஜய் ஆண்டனியும் முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டாலும் இது முழுக்க முழுக்க சுவாசிகாவின் படம். சில காட்சிகளில் வந்து ஒரு நீடித்த கேமியோவில் மட்டுமே நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. சுவாசிகாவுக்கு இது ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். தன்னுடைய கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து வியக்கவைக்கும் நடிப்பை தந்திருக்கிறார். க்ளைமாக்ஸுக்கு முன்னால் மகன்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அவ்வளவு நேரமும் அடக்கி வைத்து உணர்வுகள் அழுகையாக வெடித்துக் கிளம்பும்போது கூடவே நம்மை கலங்கடிக்கிறார். சுவாசிகாவின் மகன்களாக வரும் அஜய் திஷன், சக்தி இருவரும் நிறைவாக செய்திருக்கின்றனர்.
இரண்டாம் பாதியில் படம் தொய்வடையும் கட்டத்தில் என்ட்ரி கொடுக்கும் விஜய் ஆண்டனி திரைக்கதையை தூக்கி நிறுத்துகிறார் என்றுதான் சொல்லவேண்டும். மனைவியை இழந்து 40-களின் இறுதியில் இருக்கும் பக்குவப்பட்ட மனிதராக ஈர்க்கிறார். அவருடைய காட்சியில் பார்ப்பவர்களுக்கு ஒரு மெல்லிய புன்னகையை தருகிறது. யூடியூபர்களாக வரும் பக்ஸ், வினோதினி, கன்னியாஸ்திரியாக வரும் லிஜோமோல் ஜோஸ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் எல்லாம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளன.
படத்தின் தொடக்கத்தில் இருந்தே உறுத்திய மற்றொரு விஷயம், வாய்ஸ் ஓவர்களை கையாண்ட விதம். படம் யாருடைய கோணத்தில் செல்கிறது என்பதே சில இடங்களில் இந்த வாய்ஸ் ஓவர்களால் குழப்பத்தை தந்தது. உணர்வுபூர்வமாக சொல்லி முடிக்க வேண்டிய படத்தில் க்ளைமாக்ஸில் ட்ரோன்களை கொண்டு கிராம மக்களை விரட்டும் காட்சி மூலம் மசாலாவை தூவியிருப்பது நெருடுகிறது. படத்தின் இறுதியில் சமூக மாற்றம் என்பது வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பதை ஆழமாகப் பதிவு செய்த விதம் சிறப்பு.
மேம்போக்கான சில திரைக்கதை குறைகள் இருந்தாலும் அம்மா சென்டிமென்ட் என்ற விஷயத்தை வைத்து காலம் காலமாக ’மில்க்’ செய்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில் ’நூறு சாமி’ போன்ற துணிச்சலான முயற்சிகள் அவசியம் வரவேற்கப்பட வேண்டியவை. கொண்டாடப்படப் வேண்டியவை. தாய்மை புனிதமானதுதான் என்றாலும், பல ஆண்டுகால டெம்ப்ளேட்டை உடைத்து தாய் என்பவள் ஆசைகளும், சுக துக்கங்களும் நிரம்பிய ஒரு சக மனுஷியும் கூட என்பதை முகத்தில் அடித்தாற் போல பேசிய இயக்குநர் சசிக்கு பாராட்டுகள்.