நலன் குமாரசாமி தனது அடுத்த படங்களின் திட்டம் என்ன என்பது குறித்து பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
நீண்ட மாதங்கள் கழித்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. ஆனால், பொங்கல் விடுமுறை என்பதால் படம் நல்ல வசூல் செய்து வருகிறது. இதனிடையே தனது அடுத்த படங்களின் திட்டம் குறித்து பேசியிருக்கிறார் நலன் குமாரசாமி.
அப்பேட்டியில் நலன் குமாரசாமி, “அடுத்ததாக நாயகியை முன்னிலைப்படுத்தி ‘சாமுண்டீஸ்வரி’ என்ற படம் பண்ணும் திட்டம் இருக்கிறது. அதன் பட்ஜெட் 20 கோடி வரை வரும். அதனை முடித்துவிட்டு மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணையவுள்ளேன்.
சில வருடங்களுக்கு முன்பு, விஜய் சேதுபதி படத்துக்கான க்ளைமேக்ஸ் காட்சி மட்டும் அமையவே இல்லை. அதற்காக 15 பேர் வரை ஒன்றுகூடி பேசினோம். ஆனால், அது கிடைக்காமல் இருந்தது. தற்போது அப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை முடிவு செய்துவிட்டேன். ‘கைநீளம்’ என்பது தான் அப்படத்தின் தலைப்பு” என்று தெரிவித்துள்ளார் நலன் குமாரசாமி.