கே.பாக்யராஜ் மாரடைப்பால் மறைந்த செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திரைக்கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இசை அமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் தன்மையுடன் பல்வேறு துறைகளில் சிறப்பாக இயங்கி வந்தவர் கே.பாக்யராஜ். அவர் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவருடைய சாதனைகளைப் பாராட்டி சில மாதங்களுக்கு முன் விழா கொண்டாடப்பட்டது.
கோபி செட்டிப்பாளையம் அருகிலுள்ள வெள்ளக்கோயில் என்ற ஊரைச் சேர்ந்தவர் பாக்யராஜ். கிருஷ்ணசாமி- அபிராமி தம்பதியின் 2-வது மகனான இவர் 1953-ம் ஆண்டு பிறந்தவர். சினிமா ஆசையில் சென்னை வந்த அவர், பாரதிராஜாவிடம் ‘16 வயதினிலே’ படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தார்.
‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துக்கு வசனம் எழுதிய அவர், அதில் 2 காட்சிகளில் நடித்தார். ‘புதிய வார்ப்புகள்’ (1979) படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா. இந்தப் படம் வரவேற்பைப் பெற்ற அதே ஆண்டில், ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் அவரை சிறந்த இயக்குநராக அடையாளம் காட்டியது..
அதே ஆண்டில் ராஜேஷ் அறிமுகமான, ‘கன்னி பருவத்திலே’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதிய அவர், வில்லனாக நடித்தார். அடுத்து, ஒரு கை ஓசை, மெளனகீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்ன வீடு, எங்க சின்ன ராசா, ஆராரோ ஆரிராரோ, அவசர போலீஸ் 100, பவுனு பவுனுதான், சுந்தரகாண்டம், ராசுக்குட்டி, வீட்ல விசேஷங்க, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, வேட்டிய மடிச்சுக்கட்டு, சொக்கத்தங்கம், பாரிஜாதம், சித்து + டூ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் சில படங்கள் வெள்ளிவிழா கண்டன.
‘பாரிஜாதம்’ படத்தில் தனது மகள் சரண்யாவை நாயகியாக அறிமுகப்படுத்தினார். சூப்பர் ஹிட்டான ‘முந்தானை முடிச்சு’ படத்தில் ஊர்வசியையும் ‘சின்ன வீடு’ படத்தில் அவர் சகோதரி கல்பனாவையும் நாயகிகளாக அறிமுகப்படுத்தினார்.
இந்தியில் இயக்கிய படங்கள்:
பாக்யராஜின் பல வெற்றிப் படங்கள் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்தியில் அவரே சில படங்களை இயக்கி இருக்கிறார். பாரதிராஜா இயக்கி கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்து வெற்றி பெற்ற ‘ஒரு கைதியின் டைரி’ படத்தை ‘ஆக்ரி ராஸ்தா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார் பாக்யராஜ். அதில் அமிதாப்பச்சன் ஹீரோவாக நடித்தார்.
அவர் இயக்கிய ‘வீட்ல விசேஷங்க’ படத்தை இந்தியில் அனில் கபூர், ஸ்ரீதேவி, நடிப்பில் ‘மிஸ்டர் பேச்சாரா’ என்ற பெயரில் இயக்கினார். ‘வேட்டிய மடிச்சுக் கட்டு’ படத்தை ‘பப்பா தி கிரேட்’ என்று இந்தியில் இயக்கினார்.
‘இது நம்ம ஆளு’, ‘ஆராரோ ஆராரோ’, ‘பொண்ணு பார்க்க போறேன்’, ‘பவுனு பவுனுதான்’, ‘ஞானப்பழம்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
அவசர போலீஸ் - 100:
எம்.ஜி.ஆர் நடித்து பாதியில் நின்று போன படம் “அண்ணா நீ என் தெய்வம்”. இந்தப் படம் நான்காயிரம் அடிகள் எடுக்கப்பட்டு இருந்தது. அதில் எம்.ஜி.ஆர். நடித்த காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு புதிய திரைக்கதை எழுதி 1990-ம் ஆண்டு ‘அவசர போலீஸ் - 100” என்ற பெயரில் நடித்து இயக்கினார்.
குணசித்திர நடிப்பு:
‘ருத்ரா’, ‘அம்மா வந்தாச்சு’, ‘ஞானப்பழம்’ படங்களில் நடித்திருந்த பாக்யராஜ், ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்துக்கு பிறகு முதன்மை வேடங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ படம் மூலம் குணசித்திர வேடத்துக்குத் திரும்பிய அவர், உத்தமப்புத்திரன், வாகை சூடவா, கணிதன், துப்பறிவாளன், முருங்கைக்காய் சிப்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் கலை வாரிசு:
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால், தனது கலைவாரிசு என்று அறிவிக்கப்பட்ட கே.பாக்யராஜ், 1989-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். பின்னர் அக்கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைந்தார். பிறகு அதிலிருந்து விலகி, 2006-ம் ஆண்டு தி.மு.கவில் சேர்ந்தார்.
திருமணம்:
நடிகை பிரவீணாவை காதலித்து 1981-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கே.பாக்யராஜ். மஞ்சள் காமாலை நோய் காரணமாக 1983-ம் ஆண்டு பிரவீணா மறைந்தார். பின்னர் பாக்யராஜின், ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த பூர்ணிமா ஜெயராமை 1984-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர்.
படப்பிடிப்பு ரத்து:
கே.பாக்யராஜின் மறைவை அடுத்து இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று (ஜுன் 28) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்புகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.