மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள ‘மொத ராத்திரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
வீட்டின் மைய அறையின் இருளில் படுத்திருக்கும் குடும்பம் ஒன்று, புதுமண தம்பதியின் அறையில் விளக்கு அணைக்கப்படாமல் இருப்பதை பார்த்து கேலி செய்து சிரிப்பதில் தொடங்குகிறது ட்ரெய்லர்.
2.17 நிமிடங்கள் ஓடும் காட்சிகள் ரிஷிகாந்த், அனிஷ்மா திருமணத்தின் நாள், அந்த இரவில் நடக்கும் விஷயங்களையும், திருணத்துக்கு முன்பு நடந்த விஷயங்களையும் கலகலப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்கிறது.
‘ஊர்ல பாதிபேர் ஏன் கல்யாணம் பண்ணுறோம், எதுக்கு கல்யாணம் பண்ணுறோம்னு தெரியாம தான் கல்யாணம் பண்ணுறான்' போன்ற வசனங்கள் கவனம் ஈர்த்து, படத்துக்கான எதிர்பார்ப்பை கூட்டுகின்றன.
பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழில் தயாரிக்கும் 3-வது படம் இந்த ‘மொத ராத்திரி’.
ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மாவுடன் அனில்குமார், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுபிரியா என பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பரத் சங்கர் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படம் ஆகஸ்ட் 21-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.