இயக்குநர் மாரி செல்வராஜ் தனது புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். அதைப் பற்றி மாரி செல்வராஜ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கவித்துவமாக பகிர்ந்துள்ளார்.
“இது விவரிக்கவே முடியாத தருணம்.
இறுதியாக நிகழ்ந்தேவிட்டது”
இளையராஜா இசையில்
மாரிசெல்வராஜ் இயக்கம். என்று குறிப்பிட்டுள்ளார். கூடவே அவர் ஒரு வீடியோ இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், மாரி செல்வராஜ் தனது படத்திற்கு இளையராஜா இசையைப் பெறுவது பற்றி பல்வேறு தருணங்களில் பகிர்ந்த நெகிழ்ச்சியான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
கூடவே இளையராஜாவை அவர் சந்திக்க வருவதும், அவர் ட்யூன் போட்டுக் காட்டுவதும், இறுதியாக வெள்ளைத் தாளில் ‘மஞ்சணத்தி’ இளையராஜா - மாரி செல்வராஜ் என்று எழுதுவதும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ இளையராஜா - மாரி செல்வராஜ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிட்டார் இசையுடன் ஆரம்பிக்கிறது அந்த வீடியோ. அதன் பின்னணியில் ”இளையராஜா சாருடன் எப்ப ஒர்க் பண்ணப் போறீங்க?” என்கிற கேள்வி எழுகிறது.
“இளையராஜா சார் எனக்கொரு பெரிய கனவு. இளையராஜா சாரை நான் இன்னும் பார்த்ததே இல்லை. அவர் சிறு வயதிலிருந்தே என்னுள் கலந்து போன டிவைன் விஷயம். அவர பயன்படுத்தும் ஏக்கம், ஆசை இருக்கா என்றால் இருக்கு. ஆனால் அதற்கு நான் ஒரு மெச்சூர் ஆன இடத்துக்கு வரணும். நான் இன்னும் பக்குவப்படணும்னு நினைக்கிறேன்.
ஒட்டுமொத்த இசையாகவே இருக்கும் அவரிடம் போய் நான் ஒரு கதையைச் சொல்லி அதற்கு அவரை இசையமைக்க வைக்க ஒரு பக்குவமான ஸ்க்ரிப்ட் வேணும். அப்போ நான் போயி கதையைச் சொன்னா போதும்; வேறு ஒன்னும் செய்ய வேண்டாம். அவரு பண்ணி கொடுத்திடுவாரு. நான் ஓரமா உட்கார்ந்து பார்க்கணும்.” என்று மாரி செல்வராஜ் இளையராஜா மீது தான் கொண்ட பற்றை கசிந்துருகிப் பேசுவது இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து இளையராஜா ஒரு மெட்டை போட்டுக் காட்டுவதும், பின்னர் “நடக்க வேண்டியவை நடந்தே தீருமென்று” தங்லிஷில் சொல்வதும் இடம்பெற்றுள்ளது.
இறுதியில் “நான் எனது வாழ்க்கையை இளையராஜாவுடன் தீட்ட ஆரம்பித்துள்ளேன். எனது இதயத்தின் சிம்பொனி அவர்” என்ற வாசகத்துடன் முடிகிறது.