நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் படத்துக்கு ‘மக்கள் காவலன்’ என பெயரிடப்பட்டு, படத்தின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஜெய் பீம்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ படங்களில் மூலம் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றவர் மணிகண்டன். ‘குடும்பஸ்தன்’ படத்துக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் படத்தில் நடிக்கிறார்.
’மக்கள் காவலன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை மணிகண்டன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், ’மக்கள் காவலன். ஒரு பேட்ஜ், ஒரு மனிதன், அதிகாரத்துக்கு எதிரான ஒரு போர்’ என்று தெரிவித்துள்ளார்.
போஸ்டரில் காவலர் உடையில் ஒருவர் இருக்கிறார். பக்கத்தில் ‘தலைவர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது.
நீலம் ஸ்டுடியோஸ், பிர்லா ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்குகிறார். நிவாஸ் கே பிரசன்னா படத்துக்கு இசையமைக்கிறார்.