மைசூரு: வயது முதிர்ச்சியின் காரணமாக பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி மைசூருவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 88.
ஆந்திர பிரதேச மாநிலம் (அப்போதைய மெட்ராஸ் மாகாணம்) குண்டூர் மாவட்டம் ரெபால்லி அருகிலுள்ள பல்லப்பட்டா கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தார் ஜானகி. தனது 19-வது வயதிலேயே திரைத்துறைக்கு வந்துவிட்டார்.
1956-ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு வாங்கினார். 1957-ல் தமிழில் விதியின் விளையாட்டு படத்தின் மூலம் அறிமுகமாகி ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். ஏவி.எம். ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக அறிமுகமானார்.
திரைத்துறையில் சுமார் 60 ஆண்டு காலமாக கோலோச்சிய அவர் 48 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, சம்ஸ்கிருதம், ஒடியா, துளு, உருது, பஞ்சாபி, படுகர், பெங்காலி, கொங்கனி, ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மன், சிங்கள மொழி உட்பட 20 மொழிகளில் பாடி சாதனை படைத்தவர்.
கே.வி.மகாதேவன், கண்டசாலா, எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, ஜிகே வெங்கடேஷ், இளையராஜா, சங்கர்-கணேஷ், சந்திரபோஸ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பெரும்பாலான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ள இவர் மவுனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். 5 வயது குழந்தையாகவும், 60 வயது பாட்டியாகவும் அருமையாகப் பாடி குரலில் ஜாலங்கள் நிகழ்த்தியவர் எஸ்.ஜானகி.
4 தேசிய விருதுகள்:
பின்னணி பாடியதற்காக இதுவரை அவர் 4 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1977-ல் 16 வயதினிலே படத்தில் செந்தூரப் பூவே பாடலுக்காகவும், 1981-ல் ஒப்போல் மலையாளப் படத்துக்காக எட்டுமனூரம்பலத்தில் பாடலுக்காகவும், 1984-ல் சிதாரா தெலுங்குப் படத்துக்காக வெண்ணல்லோ கோதாரி அந்தம் பாடலுக்காகவும், 1992-ல் தேவர் மகன் படத்துக்காக இஞ்சி இடுப்பழகா பாடலுக்காகவும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களாக வயது முதிர்ச்சியின் காரணமாக அவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தனது வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைசூருவிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இறுதிச் சடங்கு குறித்த தகவல் வெளியாகவில்லை. அவரது உடல் மைசூருவில் உள்ள அவரது இல்லத்தில் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கணவர், மகன் மறைவு: அவரது கணவர் வி.ராம்பிரசாத் 1997-ம் ஆண்டு காலமானார். அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அதனால் மனமுடைந்திருந்த ஜானகி, மகன் பிரிவிலேயே மரணமடைந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.