கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘அண்டர் 18’. ‘மெட்ராஸ்காரன்’ படத்தை தயாரித்த எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஷ் தயாரிக்கும் இப்படத்தை கார்த்திக் பெருமாள்சாமி இயக்குகிறார்.
இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், சரத்குமார், ராதிகா சரத்குமார், ஸ்ரீபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படம் பற்றி விக்ராந்த் கூறும் போது, “இது ஃபேமிலி டிராமா கதை. 18 வயதுக்கு கீழ் உள்ள வாலிபர்களை, சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்கள், எப்படி சமூகத்துக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைச் சொல்லும் படம் இது. இதில் சுதீப் எனக்காக நடிக்க சம்மதித்தார். நட்சத்திர கிரிக்கெட்டில் பழக ஆரம்பித்து, பிறகு குடும்ப ரீதியாக அவரும் நாங்களும் நெருங்கிவிட்டோம். இப்படக் கதையை முழுமையாகக் கூட கேட்காமல், ‘உனக்காக இதில் நடிக்கிறேன்’ என்றார். எவ்வளவு நாள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டார். சொன்னோம். சரி என்று சொன்னது பெரிய விஷயம். வரும் 10-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.
என் சகோதரர் விஜய் முதல்வர் ஆகியிருக்கிறார். அவரை சந்திக்கவில்லை என்றாலும் போனில் வாழ்த்துச் சொன்னேன். திரைத் துறைக்காக அவர் பல நல்ல விஷயங்களைப் பண்ணுவார். பல வருடங்களுக்கு முன் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, என்னை நடிகனாக இப்படி உயர்ந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கும் மக்களுக்கு நான் நல்லது பண்ணுவேன் என்று சொல்லியிருக்கிறார். அதை இப்போது செய்வார் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் வில்லனாக நடிக்கிறேன். இதற்கு முன் ‘கெத்து’ படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் இதில் வலிமையான கதாபாத்திரமாக இருக்கும்” என்றார்.