பாதிக்கப்பட்ட மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து இறைவனிடம் வேண்டும்போது, அந்த இறைவனே இறங்கிவந்து நீதிமன்றத்தில் நிலவும் பிரச்சினைகளை எதிர்த்து சண்டை செய்தால் எப்படி இருக்கும்? - இதுதான் ‘கருப்பு’ படத்தின் ஒன்லைன்.
கேரளாவைச் சேர்ந்த ஒரு தந்தையும் மகளும் (இந்திரன்ஸ், அனகா மாயா) ரயிலில் வந்து சென்னையில் இறங்கும்போது மர்ம கும்பல் ஒன்று அவர்களிடம் இருந்து 60 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறது. சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தை ஆட்டிப்படைக்கும் பேராசை பிடித்த வழக்கறிஞர் பேபி கண்ணனிடம் (ஆர்.ஜே.பாலாஜி) செல்கின்றனர். ஆனால் பேபி கண்ணனோ தனது செல்வாக்கால் நீதிபதி உட்பட அனைவரையும் விலைக்கு வாங்கி அந்த நீதிமன்றத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஒரு மாஃபியா போல செயல்படுகிறார்.
தன் மகளின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக, திருடப்பட்ட அந்த நகைகளை மீட்க கண்ணனை நாடும் அந்த முதியவரிடம் கண்ணனும் அவனது ஆட்களும் நகையை மீட்காமல் பிரியாணி, சிகரெட் என அவர்களை ஏமாற்றி அலைகழிக்கின்றனர். நம்பிக்கை இழந்த தந்தை, கோர்ட் வளாகத்தில் இருக்கும் கருப்பசாமி கோயிலில் வேண்டுகிறார்.
இதனையடுத்து பூமிக்கு வரும் வேட்டை கருப்பு (சூர்யா) எதிரிகளை துவம்சம் செய்கிறார். எனினும் பேபி கண்ணன் விடுக்கும் ஒரு சவாலை ஏற்றி மனித உருவம் எடுத்து சரவணன் என்ற பெயரில் வழக்கறிஞராக நீதிமன்றத்துக்கு வருகிறார். வில்லன் விடுத்த அந்த சவால் என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பசாமியால் நீதிபெற்றுத் தர முடிந்ததா என்பதை பெரிய திரையில் பார்க்கலாம்.
நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக திரையில் வெளியாகி இருக்கும் இப்படம் உண்மையில் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த ட்ரீட் ஆக இருக்கும். கடைசி சில படங்களில் சூர்யா மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஒன்று, தொடர்ந்து ஒரே போன்று நடிக்கிறார் என்பதுதான். அதை இப்படத்தில் உடைத்து ஒரு ரகளையான கம்பேக் கொடுத்திருக்கிறார் சூர்யா.
கிட்டத்தட்ட படம் தொடங்கி அரை மணி நேரத்துக்கு மேல் தாமதமாக என்ட்ரி கொடுத்தாலும் சூர்யாவின் கருப்பு கதாபாத்திரம் எப்போது திரையில் தோன்றும் என்று பார்ப்பவர்களுக்கு ஆர்வம் ஏற்படுவது படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.
அந்த அளவுக்கு படத்தின் ஆரம்ப காட்சிகள் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கின்றன. ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் கடவுளை வைத்து சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளை தோலுரித்த இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, இதில் மற்றொரு கடவுள் கதாபாத்திரத்தை வைத்து நீதித் துறையில் நடக்கும் ஊழல்களை பேசி இருக்கிறார். எனினும் சூர்யாவுக்காக இதில் அதீதமான மாஸ் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தாலும் அவை எங்கும் உறுத்தும்படி இல்லை.
படத்தில் வரும் சில நுணுக்கமான காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. ஆரம்பத்தில் நீதிமன்றத்தில் ஒரு மூதாட்டிக்கு உட்கார இடம் தரும் பினு கதாபாத்திரம், தொடர்ந்து அலைக்கழிக்கப்படும்போது கோபமடைந்து இருக்கை தர மறுக்கிறது. சூழல் எப்படி ஒரு மனிதனின் குணத்தையே மாற்றுகிறது என்பதை விளக்கம் காட்சி அது.
அதேபோல், 30 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாகத் தவறாக அறிவிக்கப்பட்டு, வழக்காடி் தோற்று, இறுதியில் நீதிமன்ற வளாகத்திலேயே வேலை செய்து வரும் 'கோஸ்ட்' சண்முகம் கதாபாத்திரமும் அதன் பின்னணியும் நெகிழச் செய்கிறது. இதுபோன்ற சின்னச் சின்ன இடங்களில் இயக்குநராக தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
முன்பே குறிப்பிட்டது போல் சூர்யாவுக்கு இது மிகச் சிறந்த கம்பேக். திரையரங்குகளில் கொண்டாட்ட தருணங்களை மிஸ் செய்த அவரது ‘அன்பான’ ரசிகர்களுக்கு கிடைத்துள்ள ‘கிடா விருந்து’ இப்படம்.
படம் முழுக்க சூர்யாவின் முந்தைய பட ரெஃபெரன்ஸ்கள் வரும் இடங்களில் அரங்கம் அதிர்கிறது. கருப்பசாமி கதாபாத்திர லுக் சூர்யாவுக்கு கன கச்சிதம். த்ரிஷாவுக்கு படத்தில் பெரிய வேலை இல்லை. எனினும் கொடுக்கப்பட்ட வேலையை குறையின்றி செய்திருக்கிறார்.
வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி ஆரம்பத்தில் பொருந்தாதது போல தோன்றினாலும், போகப் போக தன் நடிப்பால் ரசிக்க வைத்து விடுகிறார். ஊழல் நீதிபதியாக வரும் நட்டி சரியான பாத்திரத் தேர்வு.
ஏற்கெனவே சில தமிழ்ப் படங்களில் சிறிய ரோல்களில் நடித்திருந்தாலும், மலையாள நடிகர் இந்திரன்ஸுக்கு தமிழில் இப்படம் ஒரு சிறந்த அறிமுகமாக இருக்கும். அந்த அளவுக்கு எமோஷனலான நடிப்பை வழங்கி அதகளப்படுத்துகிறார். எதற்கு இந்த படத்தில் ஸ்வாசிகா என்பது கருப்பசாமிக்கே வெளிச்சம்.
முதல் பாதியில் இருந்த எமோஷனல் ஆழத்தை இடைவேளைக்குப் பிறகு படம் இழந்து தவிக்கிறது. சூர்யாவின் 'காட் மோட்’ காட்சிகள் ரசிக்க வைத்தாலும், சூப்பர்நேச்சுரல் சக்திக்கான விதிகள் படத்தில் தெளிவாக இல்லை. மனிதன் உருவாக்கிய நீதித்துறைக்காக ஒரு கடவுள் ஏன் போராட வேண்டும்?
பினுவின் தந்தைக்கு முன்பே பலரும் அங்கு வேண்டினரே, அப்போது வராத கருப்பு இப்போது மட்டும் ஏன் வருகிறார்? அதிலும் வில்லன் பேபி கண்ணன் விடுக்கும் சவாலை ஏன் கடவுள் ஏற்கவேண்டும் (ஏற்கவில்லை என்றால் படம் 30 நிமிடத்திலேயே முடிந்திருக்குமே) போன்ற கேள்விகள் எழுவதை தவிக்க முடியவில்லை. படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.
ஏதோ காவல் நிலைய எல்லை போல தனக்கென ஒரு பகுதியை வரையறை செய்து கொண்டு செயல்படுகிறார் கடவுள். எனினும் இது ஒரு ஃபேண்டஸி படம் என்ற அளவில் இதுபோன்ற குறைகளை மன்னித்து விடலாம்.
இரண்டாம் பாதி முழுக்கவே காட்சிகள் எந்த இலக்கும் இன்றி இஷ்டத்துக்கு ஏனோதானோ என்று எழுதப்பட்டிருப்பது, முதல் பாதி கொடுத்த தாக்கத்தை குலைக்கிறது. எந்தவித முன்னேற்றமும் இன்றி ஹீரோ - வில்லன் மோதல் என்ற இடத்திலேயே திரைக்கதை சுற்றிக் கொண்டிருப்பது பெரிய மைனஸ். ’லியோ’, ‘சிங்கம்’, ‘ஜெய் பீம்’ ஏராளமான படங்களின் ரெஃபெரன்ஸ்கள் வருகின்றன. ஆனால் அவையெல்லாம் வெறும் தியேட்டர் தருணங்கள் மட்டுமே. எதுவும் திரைக்கதைக்கு உதவவில்லை.
சாய் அபயங்கரின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது. சில இடங்களில் காதுகளை பதம் பார்க்கவும் தவறவில்லை. பாடல்களும் அவை வைக்கப்பட்ட இடங்களும் மாஸ் ரகம். ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கருப்பு வரும் காட்சிகளில் விஸ்வரூபம் எடுத்து ஆடியுள்ளார்.
முந்தைய சில படங்களோடு ஒப்பிடுகையில் சூர்யாவுக்கு இது நிச்சயம் இது சிறப்பான கம்பேக் என்பதில் சந்தேகமில்லை. சூர்யாவின் திரை ஆளுமை, முதல் பாதியில் ஆர்.ஜே.பாலாஜியின் புத்திசாலித்தனமான சில காட்சிகள், அனல் பறக்கும் ஆக்ஷன் ஆகியவற்றுக்காக தாராளமாக பார்க்கலாம். எனினும் முதல் பாதி திரைக்கதையில் இருந்த உழைப்பை இரண்டாம் பாதியிலும் செலுத்தி இருந்தால் ஒரு தரமான ஆக்ஷன் ஃபேண்டஸி படம் தமிழுக்கு கிடைத்திருக்கும்.