தமிழ் சினிமா

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ டீசர் எப்படி? - கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷ்!

ப்ரியா

இளையராஜா இசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘டோரதி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

தான் இயக்கும் புதிய படத்தின் பெயர் டோரதி  என செவ்வாய்க்கிழமை கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1.28 நிமிடங்கள் ஓடும் டீசரில், அகலமான சாலையோரத்தில் வலதுபுறத்தில் இருந்து கிளம்பிவரும் புழுதி திரையை நிறைக்கிறது.

புழுதி மங்கி திரை தெளிவாகும் போது, தூரத்தில் ஆடுகளின் சத்தம் கேட்க, கால் முட்டிகளைக் கட்டியபடி கட்டிலில் அமர்ந்து ஒருவன் புகைத்துக் கொண்டிருக்கிறான். ஆடுகளின் சத்தத்துடன் இப்போது டெலிபோன் மணியும் அடிக்க, மனித சண்டை, சேவல் சண்டை என காட்சிகளும் மாறுகின்றன.

முளைப்பாரி சடங்கு, சால்னாவுக்குள் முழ்கும் பரோட்டா, சிறுவர் நட்பு, தூர லாரி பயணம் என காட்சிகள் நம்மை ஒரு தென்மாவட்டத்தின் உலகத்துக்குள் அழைத்து செல்ல, விடாது ஒலிக்கு டெலிபோன் சத்தத்துடன் இப்போது ஒரு இசை லயத்தில் சேவலின் கேவல் கைகோர்த்துக் கொள்கிறது.

ஒருவன் அலறும் டெலிபோனை எடுத்து காதுக்கு கொடுத்து அதை அமைதியாக்க, அது சொன்ன செய்தியால் அவனும் அமைதியாகிப் போகிறான்.

இப்போது திரையில் வெண் தாமரையாய் தோன்றி கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷ் நண்பர்கள் த்ன் பெயரை தவறாக உச்சரிக்கும் போது,  ‘டோரதி’ என அதை சரியாய் உச்சரித்து,  தன்னை அறிமுகம் செய்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவும் செய்கிறாள்’      

கீர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் ஆகியோர் நடிக்கும் ‘டோரதி’ படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா எண்டர்டன்மென்ட் உடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் தனது தம்மம் ஃபிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கிறார்.

படத்துக்கு எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணியை கணேஷ் சிவாவும், சண்டை பயிற்சியை தினேஷ் சுப்புராயனும் மேற்கொண்டுள்ளனர்.

டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ள இந்தப் படம், வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT