ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம், ‘கன்னடத்து பைங்கிளி’.
இதில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா, சிங்கம் புலி, புகழ், ஆதவன், ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை சிங்கம் புலி, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களை இயக்கிய சாய் ரமணி இயக்கியுள்ளார். இதில் கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். எம்.பி.எம். என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரித்துள்ளார். எஸ்.ஆர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் பற்றி பேசிய இயக்குநர் சாய்ரமணி, ‘‘பாக்யராஜின் திடீர் மறைவு எங்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளன்று பாக்யராஜ் மற்றும் டி.ராஜேந்தரை வைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அன்றைய தினம் பாக்யராஜுக்கான அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. 80 மற்றும் 90-களில் பிரபலமாக இருந்த இருவரும் இணைந்து பணியாற்றிய முதல் படம் இது.
‘கன்னடத்து பைங்கிளி’ படத்தில் தனது பகுதிகள் அனைத்தையும் பாக்யராஜ் சிறப்பாக முடித்துக் கொடுத்தார். சில க்ளோஸ்-அப் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி இருந்தது. அதை ஏ.ஐ.மூலம் உருவாக்க உள்ளோம். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமாவும் இணைந்து நடித்த படமும் இதுதான். கணவன்-மனைவியாகவே நடித்துள்ளனர்” என்றார்.