இன்று நடைபெறவிருந்த ‘ஜனநாயகன்’ மறுதணிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது.
‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை இன்று (மார்ச்.9) மதியம் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. இதனால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது இந்த மறுதணிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சிக்கு வரவிருந்த மறுதணிக்கை அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கையின் புதிய தேதி விரைவில் தெரியவரும் எனத் தெரிகிறது. இந்த மறுதணிக்கை ஒத்திவைப்பால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால் இன்று மறுதணிக்கை முடிவடைந்தால், தணிக்கை சான்றிதழை உடனே பெற்று வெளியீட்டு தேதியை முடிவு செய்யலாம் என படக்குழு கருதியது. இது அனைத்திலுமே தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த படம் ‘ஜனநாயகன்’. தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையால், தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் சென்றது. அங்கும் அப்பிரச்சினை முடிவடையவில்லை. தற்போது நீதிமன்றம் வழக்கினை வாபஸ் பெற்று, மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தது தயாரிப்பு நிறுவனம்.
அதிலும் தாமதமாகி இருப்பதால், படக்குழுவினர் பெரும் கவலையில் இருக்கிறார்கள். தணிக்கை முடிவடைந்தால் மட்டுமே புதிய வெளியீட்டு தேதி எப்போது என்று முடிவு செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது. தமிழக தேர்தல் தேதி விரைவில் வெளியாகவுள்ளது. ஆகையால், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த உடன் தான், ‘ஜனநாயகன்’ வெளியாகும் என்பது உறுதியாகிவிட்டது.