தமிழ் சினிமா

“மதிப்பீட்டுப் பிழை” - கார் கண்ணாடி உடைப்பு விவகாரத்தில் ஜேம்ஸ் வசந்தன் வருத்தம்

ப்ரியா

சென்னை: தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “என்னுடைய 'இரு மதிப்பீட்டுப் பிழைகளை' நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

அந்த இடம் நீல நிற தகரத் தட்டிகள் அடித்திருந்ததால் அது காலி மனை, அல்லது கட்டுமானப் அணி நடக்கிற இடம் என்று நினைத்து அங்கு காரை நிறுத்தினோம். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை. உச்சி வெயில் நேரம். சுற்றுவட்டாரத்தில் யாரும் காணப்படவில்லை. வெளியே இருந்து பார்க்கையில் அது திறந்த வெளியாக காலியாகத்தான் தெரிந்தது. 

இன்றைய விசாரணைக்குப் பிறகுதான் அதற்குள் தொலைவில் உள்ளே ஒரு குடித்தனம் இருந்தது தெரியவந்திருக்கிறது. அவர்களுக்கும் இந்த உணவகத்துக்கும் நீண்ட பகை இருந்திருக்கிறது. அதன் நேற்றைய பலி நான். 

காரை எடுத்துக்கொண்டு கிளம்பி சற்று நேரம் கழித்துதான் கண்ணாடி உடைந்திருக்கிறது என்பதை நாங்கள் கவனித்தோம். ஏதோ ஒருவித சலசல சத்தம் கேட்டுக்கொண்டே வருகிறது.

தற்செயலாக திரும்பிப் பார்த்தால் கண்ணாடி சில்லு சில்லாக உள்ளே விழுந்துகொண்டே வருகிறது. என் மனைவிதான் முதலில் கவனித்தார்.

வெயிலின் உக்கிரம் தாங்காமல் உடைந்ந்திருக்கும் என்றார். சூட்டில் வெடித்தால் இப்படி உடையாது. இது ஒருபுள்ளித் தாக்குதல். உடைக்கப்பட்டிருக்கிறது என்றேன்.

உடனே என்ன எண்ணம் வரும்? முந்தைய நாள்தான் தவெகவினர் உச்சக்கட்ட கோபத்தில் கெட்டகெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டித் தீர்த்திருக்கின்றனர். அவர்களில் யாரோ செய்திருக்கக்கூடும் என்ற எண்ணம் வந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் வீடியோ எடுத்தேன். 

காவல்துறைக்குப் புகார் கொடுக்கலாமா என்று ஆலோசித்தோம். சின்ன விஷயம்தானே, வேண்டாம், விட்டுவிடலாம் என முடிவுசெய்தோம். ஆனால் இதைப்போல சில நிகழ்வுகளில் நாங்கள் புகார்கொடுக்காமல் போனதால் பல சங்கடங்களை பல ஆண்டுகள் அனுபவித்திருக்கிறோம் என்பதை என் மனைவிக்கு நினைவூட்டினேன். அவர் யோசிப்போம்; தேவைப்பட்டால் கொடுப்போம் என்று சொன்னார். 

ஒரு தகவலாகவாவது இதைப் பதிவுசெய்து வைத்தால் பின்னர் உதவலாம் என்று நான் பேஸ்புக்கில் பகிர்ந்தேன். இது என் மனைவிக்குத் தெரியாது. அவர் சமூக ஊடகங்களில் இல்லை. இங்கே என்னுடைய மதிப்பீட்டுப் பிழை, அந்தக் 'குறிப்பிட்ட' சொல்லைப் பயன்படுத்தியது. 

நான் ஊடகங்களில் சொற்களில் மிக எச்சரிக்கையாக இருப்பேன். சொல் தேர்வுகளில்  மிகக் கவனமாக இருப்பேன். ஆனால், இப்படி கண்ணாடி உடைந்தது என் உணர்வை சற்று சலனப்படுத்தியதில் இந்தப் பிழையைச் செய்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன்.

இத்தனை ஆண்டு ஊடக அனுபவம் இருந்தும் இந்தப் பிழையை நான் செய்தது எனக்கு மிகப்பெரிய உறுத்தலைக் கொடுத்திருக்கிறது. 

அந்த ‘ஒரு’ சொல்தான் இந்த உணர்வுபூர்வமான தேர்தல் நேரத்தில் எல்லாருடைய கூடுதல் கவனத்தை ஈர்த்து, இதற்கு அரசியல் கோணத்தைக் கொடுத்து இப்படிப் பூதாகாரமாக்கி விட்டது. 

பலருடைய நேரத்தையும், உணர்வுகளையும் பாதித்துவிட்டது. இது எனக்கு அளவுகடந்த வேதனையைக் கொடுத்திருக்கிறது. நானா இப்படி கவனக்குறைவாக இருந்திருக்கிறேன் என்பது என்னைச் சுண்டிக்கொண்டே இருக்கிறது. வாழ்க்கையின் அனுபவப் பாடங்களுக்கு முடிவே இல்லை என்று மீண்டுமொரு முறை உணர்கிறேன்” இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஜேம்ஸ் வசந்தன் தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை பதிவிட்டு அதை விஜய் ரசிகர்கள் செய்திருப்பார்கள் என்ற ரீதியில் மறைமுகமாக சில வார்த்தைகளை பயன்படுத்தி குறிப்பிட்டிருந்தார். பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், காவல்துறை விசாரணையில் காரை ஒருவரின் வீட்டின் முன்னால் நிறுத்தியதால் அந்த வீட்டின் உரிமையாளர்தான் கார் கண்ணாடியை உடைத்ததாக தெரியவந்துள்ளது. 

SCROLL FOR NEXT