தமிழ் சினிமா

காமராஜர் குரலில் பேசியது பெரிய பாக்கியம்..! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 8

Guest Author

எனக்கு டப்​பிங் வாய்ப்பு அதி​க​மாக வராத​ காலத்தில், ‘பி​னா​கா’ என்ற பற்​பசை நிறு​வனத்​தில் விற்​பனை பிர​தி​நி​தி​யாக வேலையில் சேர்ந்​தேன். அதற்​காகக் கடைகளுக்​குச் செல்​லும் போது பலதரப்​பட்ட மனிதர்​களைச் சந்​திக்​கும் வாய்ப்பு கிடைத்​தது. திருநெல்​வேலிக் காரர்​கள்​தான் அதி​க​மாகக் கடை வைத்திருந்​தார்கள். அப்​போது வடபழனி​யில், அம்​பாள் ஸ்டோர் என்ற கடை இருந்​தது.

அந்​தக் கடைக்​கார அண்​ணாச்​சி​யிடம் பேசிக் கொண்​டிருப்​பேன். அவர்​கள் கடை​யில் வேலை செய்​பவர்​கள் எப்​படிப் பேசிக் கொள்​கிறார்​கள் என்​ப​தைக் கூர்ந்து கவனிக்க ஆரம்​பித்​தேன். அந்​தப் பேச்​சின் அழகு பிடித்​திருந்​தது. ‘லே’ என்று முடித்​து​விட்​டால் மட்​டும் அது திருநெல்​வேலி வழக்கு அல்ல என்​ப​தைப் புரிந்து கொண்​டேன். அதைத்​தான் ‘சாது மிரண்​டா’ படத்​தில் பயன்​படுத்தி இருப்​பேன்.

நான் டப்​பிங் பேச ஆரம்​பித்த பிறகு தெலுங்​கு​காரர்​கள், எப்​படி தமிழ் பேசுகிறார் கள் என்​ப​தைக் கவனிப்​பேன். பொது​வாகவே மொழிகளின் மீது எனக்கு அதிக ஆர்​வம் உண்​டு. தெலுங்கு படங்​களைத் தமிழில் மொழி மாற்​றம் பண்​ணும் போது நிறைய தெலுங்கு தயாரிப்​பாளர்​கள் வரு​வார்​கள்.

அவர்​கள் பேசும் தமிழை வைத்து தெலுங்​குக்​கா​ரார்​கள் என்​பது தெரிந்​து​விடும். அவர்​களு​டன் அதிக நேரம் செல​வழித்​த​போது தெலுங்​கை​யும் கற்​றுக் கொண்​டேன். நாம் ‘அண்​ணே’ என்​போம். அவர்​கள் மரி​யாதை​யாகச் சொல்ல வேண்​டும் என்​றால், ‘அண்​ணை​யா’ என்​பார்​கள். தமிழுக்​கும் தெலுங்​குக்​கும் வார்த்​தைகளில் என்ன வித்​தி​யாசம் இருக்​கிறது என்​ப​தைப் புரிந்​து​கொண்​டேன்.

கேப்​டன் விஜய​காந்​தின் மூல​மாக ‘கஜேந்​தி​ரா’ படத்​தில் நடிக்க வாய்ப்​புக் கிடைத்​த​போது தெலுங்கு ஸ்டைலில் தமிழ்ப் பேசுவதைப் பயன்​படுத்​திக் கொண்​டேன். அந்​தப் படத்​துக்​குச் சென்​ற​போது, என் தலை​யில் வழுக்கை இருந்​த​தால், நெற்​றி​யில் நாமம் போட்​டார்​கள். நாமம் போட்​ட​தால், இயக்​குநர் சுரேஷ் கிருஷ்ணா​விடம், “தெலுங்​கு​காரர் தமிழ்ப்​பேசுற மாதிரி என் கேரக்​டரை வச்​சுக்​கலாமே?” என்று சொன்​னேன். “சரி” என்​றார் அவர். இதைக் கேட்​டதும் விஜய​காந்த் அண்​ணனும் ரமேஷ் கண்​ணா​வும் ரசித்து உற்​சாகப்​படுத்​தி​னார்​கள். அதில் என் கேரக்​டர் சிலாகித்​துப் பேசப்​பட்​டது.

என் வீட்​டுக்கு அரு​கே, நிறைய மலை​யாளி​கள் இருந்​தார்​கள். அவர்​கள் பேசும் ஸ்டைலும் அந்த ஏற்ற இறக்​க​மும் ராகம் போலவே இருக்​கும். இயல்​பாகவே எனக்கு அந்த ஆர்​வம் இருந்​த​தால், அம்​மொழி​யில் பேசக் கற்​றுக்​கொண்​டேன். அது பிற்​காலத்​தில் எனக்கு டப்​பிங் பேச உதவி​யாக இருந்​தது.

‘இதற்​குத்​தானே ஆசைப்​பட்​டாய் பால​கு​மா​ரா’ படத்​தில் மலை​யாள வங்கி மானேஜ​ராக நடித்​திருப்​பேன். அந்​தப் படத்​தைப் பார்த்​து​விட்டு நிறைய மலை​யாளி​கள் என்​னைப் பாராட்​டி​னார்​கள். ஒரு இன்​சூரன்ஸ் நிறுவன நண்​பர், “சார் உங்​களை எங்க ஆபிஸ்ல வேலை பார்க்​கிறாங்க, ‘அவரு நம்மட மலை​யாளி​யானு’ன்னு சொல்ல ஆரம்​பிச்​சுட்​டாங்க” என்​றார். அந்​தளவுக்கு அதை இயல்​பாகப் பண்​ணி​யிருப்​ப​தாகச் சொன்​னார். இவ்​வளவுக்​கும் அந்​தப் படத்​தின் இயக்​குநர் கோகுல், என் பகு​தியை ஒரே நாளில் எடுத்து முடித்​தார். காலை 9 மணியி​லிருந்து இரவு 11 மணி வரைக்​கும் அக்​காட்​சிகளைப் படமாக்​கி​னார்.

அதே போல ‘காம​ராஜர்’ படத்​தில், ஐயா காம​ராஜருக்கு நான் பேசி​யதை, அவர் குரல் போலவே இருப்​ப​தாகச் சொல்லி இருக்​கிறார்​கள். எனக்​குக் கிடைத்த பெரிய பாக்​கிய​மாக அதைப் பார்க்​கிறேன். முதலில் அந்​தப் படத்​துக்​குப் பேச அழைத்​த​போது எனக்​குப் பயம் வந்​து​விட்​டது. எப்​போதோ வாழ்ந்த யாரோ ஒரு​வருக்கு நான் பேச​வில்​லை.

ஐயா​வின் குரலைக் கேட்​ட​வர்​கள் இன்​னும் இருக்​கிறார்​கள். நானே கேட்​டிருக்​கிறேன். எந்​தெந்த இடத்​தில் ’...ண்​ணே’ என்று சொல்​வார் என்​ப​தைக் கவனித்​திருக்​கிறேன். இருந்​தா​லும் அவர் பேசிய டேப் வேண்​டும், அதைக் கேட்டு விட்​டுத்​தான் பேசுவேன் என்று சொல்லி விட்​டேன். தந்​தார்​கள். கேட்​டு, நன்​றாக உள்​வாங்​கி​விட்​டுத்​தான் பேசினேன்.

இப்​படி எனக்கு கற்​றுக் கொடுத்​தவர்​கள் பல குரு​நாதர்​கள். அதாவது கற்​றறிந்த சான்​றோர்​களி​லிருந்து காகிதம் எடுக்​கும் தொழிலா​ளி​கள் வரை எல்​லோரை​யும் என் குரு​நாதர்​களாக நினைத்து அவர்​களிடம் இருந்​து​தான்​ பேச்​சு வழக்​கைக்​ கற்​றுக்​ கொண்​டேன்​.

(திங்கள்தோறும் பேசுவோம்)

SCROLL FOR NEXT