சென்னை: “பாரதிராஜாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். உங்களோடு இருக்கும் உறவுதான் அவருடனும் இருக்கிறது. இரண்டும் வேறு வேறு இல்லை” என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமை, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா , வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து, தனது வாழ்நாள் நண்பரும், கலைப்பயணத்தில் மிக நெருக்கமானவருமான பாரதிராஜாவின் உடலுக்கு, இசைஞானி இளையராஜா நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பேச ஒன்றும் இல்லை. பாரதிராஜாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். உங்களோடு இருக்கும் உறவுதான் அவருடனும் இருக்கிறது. இரண்டும் வேறு வேறு இல்லை. நாட்டையும், நாட்டு மக்களையும், கலைஞர்களையும் நேசிப்பதுதான் என்னுடைய பிறப்பு. அதைத் தவிர ஒன்றும் இல்லை. ” என்று அவர் தெரிவித்துள்ளார்.