தமிழ் சினிமா

‘பராசக்தி’ ஓடிடி ரிலீஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என ‘பராசக்தி’ பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்த நிலையில், அந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

​சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதை தனது ‘செம்மொழி’ கதையிலிருந்து திருடப்பட்டது என இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

          

இந்த வழக்கில், பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘கடந்த 1965-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஒரு வரலாற்று நிகழ்வு. வரலாற்றுச் சம்பவங்கள் அல்லது சமூகப் போராட்டங்கள் மீது எந்த தனிநபரும் காப்புரிமையோ அல்லது தனியுரிமையோ கோர முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘படத்தின் கதைக்களம் வேண்டுமானால் போராட்டக் காலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். ஆனால் கதாபாத்திரங்கள், வசனங்கள் மற்றும் திரைக்கதை முற்றிலும் கற்பனையானவை மற்றும் தனித்துவமானவை’ என்றும் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காமல், வழக்கு விசாரணையை, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிப்ரவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT