நடிகை ராதிகா சரத்குமார் திரைத்துறையில் 49-வது ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளதை அடுத்து அவருக்கு ‘ஹாய்’ படக்குழுவினர் கேக் வெட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
நடிகை ராதிகா, பாரதி ராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘இன்று போய் நாளை வா’, ‘மூன்று முகம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, `சிப்பிக்குள் முத்து' என ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ள அவர், சின்னத்திரையிலும் முத்திரைப் பதித்தார். அவர் பவுனுத்தாயி என்ற 70 வயது மூதாட்டி தோற்றத்தில் நடித்து சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில் ராதிகா, சினிமாவில் 49 ஆண்டுக்குள் நுழைவதை அடுத்து, அவருக்கு ‘ஹாய்’ படக்குழுவினர் கேக் வெட்டி ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கவின், நயன்தாரா நடிக்கும் ‘ஹாய்’ படத்தை விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார்.