இளையராஜாவின் பயோபிக் கைவிடப்படவில்லை என்றும் அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை கதை, திரைப்படமாகிறது. இப்படத்துக்கான தொடக்க விழா கடந்த 2024-ம் ஆண்டு சென்னையில் நடந்தது. கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். இளையராஜாவாக தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தொடக்க விழாவுக்குப் பிறகு அப்படம் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
நடிகர் தனுஷும் இயக்குநர் அருண் மாதேஸ்வரனும் மற்ற படங்களில் கவனம் செலுத்தி வருவதால் இளையராஜா பயோபிக் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. அதோடு அருண் மாதேஸ்வரன் இப்படத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இதை மறுத்துள்ள அருண் மாதேஸ்வரன் தரப்பு, தற்போது லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கும் ‘டிசி’ படத்தை அவர் இயக்கி வருகிறார். அது முடிந்ததும் இளையராஜா பயோபிக்கை தொடங்குவார் என்று தெரிவித்துள்ளது. இதனால் இப்படம் பற்றிய அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகலாம் என்று தெரிகிறது.