பான்- இந்தியா படங்கள் மற்றும் ஓடிடி-வருகைக்குப் பிறகு திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை மொழிமாற்றுவது பிசியாகி இருக்கிறது.
மலையாளத்தில் இருந்து வெளியாகும் திரைப்படங்களை அதிகமாக மொழிமாற்றி வருகிறார் இயக்குநரும் மொழிமாற்று வடிவமைப்பாளருமான ஆர்.பி.பாலா.
சமீபத்தில் வெளியான ‘லோகா- சாப்டர் 1: சந்திரா’ படத்தின் சக்சஸ் மீட்டில், அவருடைய டப்பிங்கை வெளிப்படையாக பாராட்டியிருந்தார் துல்கர் சல்மான்.
பாலாவிடம் கேட்டால், “அதுதானே சார் என் வேலை” என்கிறார் அமைதியாக. சென்னையில், நயன்தாராவின் ‘டியர் ஸ்டூடன்ட்’ டப்பிங்கில் இருந்தவரிடம் பேசினோம்.
தொடர்ந்து மலையாளப் படங்களுக்கு டப்பிங் பண்ணிட்டு வர்றீங்க...
மலையாளம் மட்டுமல்ல, தெலுங்குக்கும் பண்ணியிருக்கேன். அந்த இரண்டு மொழிகளும் எனக்கு நல்லா தெரியும்ங்கறது எனக்கு பிளஸ். மலையாளத்துல இருந்து நிறைய படங்கள் டப்பிங் பண்ணி யிருந்தாலும் எனக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது மோகன்லால் சாரின் ‘புலிமுருகன்’ தான். அதைத் தமிழ்ப் படுத்தும்போது மோகன்லால் சார்தான் தமிழ்ல பேசினார்.
மற்ற நடிகர், நடிகைகளுக்குச் சரியான ஆட்களைத் தேர்வு செய்து பண்ணினேன். மலையாள வார்த்தைக்கு தமிழ்ல, நடைமுறையில எந்த வார்த்தை பொருத்தமா இருக்கும்னு தேடி வசனம் எழுதுவேன். அந்தப் படம் தமிழ்லயும் ஹிட்டானதால நான் வெளியே தெரிய ஆரம்பிச்சேன்.
மோகன்லாலின் பெரும்பாலான படங்களுக்கு நீங்கதான் மொழிமாற்றம் பண்ணியிருக்கீங்க...
‘புலிமுருகன்’தான் காரணம். அதை பார்த்தீங்கன்னா டப்பிங் படம் மாதிரியே தெரியாது. நேரடி தமிழ்ப் படம் மாதிரியே இருக்கும். படம் பார்த்துட்டு மோகன்லால் சார் ரொம்ப பாராட்டினார். அதுக்குப் பிறகு அவர் நடிச்ச எல்லா படங்களுக்கும் நான்தான் டப்பிங் பண்ணியிருக்கேன்.
‘லூசிஃபர்’ படத்தை பார்த்துட்டு நேரடி தமிழ்ப் படம் மாதிரியே இருக்குன்னு நிறைய பேர் பாராட்டினாங்க. ‘ஒப்பம்’, ‘மரைக்காயர்’, அவர் இயக்கி நடிச்ச ‘பரோஸ்’, ‘எம்புரான்’, ‘ஹிருதயபூர்வம்’னு மோகன்லால் சாரோட நிறைய படங்கள் பண்ணியிருக்கேன்.
பொருத்தமான குரல்களை எப்படி தேர்வு பண்றீங்க?
நான் டப்பிங் ஸ்டூடியோ வச்சிருக்கேன். யார், யாரோட வாய்ஸ், எந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமா இருக்கும்னு தெரியும். “லோகா- சாப்டர் 1: சந்திரா’ படத்துக்கு கூட அதோட இயக்குநர் டொமினிக் அருண், ரொம்ப ஸ்டைலிஷா பண்ணலாம்னு சொன்னார்.
ஒரு கதாபாத்திரத்துக்கு முதல்ல ஒரு வாய்ஸ் டிசைன் பண்ணியிருந்தேன். அது இயக்குநருக்கு திருப்தியா இல்லை. பிறகு அவர் எதிர்பார்க்கிறதைப் புரிஞ்சுகிட்டு வாய்ஸ் தேர்வு பண்ணினேன். வசனங்களை கூட மணிரத்னம் சார் படம் மாதிரி எழுத வச்சார். டப்பிங் பேசறவங்ககிட்ட குறைஞ்சது பத்து டேக் வரையாவது எடுத்து வைப்பேன்.
‘ஆடுஜீவிதம்’ படத்துல ஒரு பையன் கேரக்டருக்கு 50 டேக் வரை போயிருக்கேன். படத்துல வர்ற அந்த ‘ஃபீலை’ குரல்லயும் கொண்டு வரணும். ஒரிஜினாலிட்டி வேணுங்கறதுக்காக நிறையவே மெனக்கெடுவேன். கிட்டத்தட்ட இதுவும் ஓர் இயக்குநருக்கான வேலை தான். அதனாலதான் ‘டப்பிங் டைரக்டர்’னு டைட்டில் கார்டுல போடறாங்க. இதுவரை நான் பண்ணின படங்களை, மலையாளத்தை விட தமிழ்ல நல்லா இருக்குன்னு சொல்லியிருக்காங்க. அந்த பெயர் திருப்தியா இருக்கு.
என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்றீங்க?
‘லிப் சிங்’குக்கு வசனம் எழுதறதும் அதுக்கு சரியான வாய்ஸை கொடுக்கிறதும், அதைச் சரியா பேசறதும்தான் இதுல சவாலான விஷயம். ஒரிஜினல் தன்மை குறைஞ்சிடாம, நம்ம ஆடியன்ஸுக்கும் தெளிவா புரியற மாதிரி அதை பண்றதுதான் பெரிய வேலை.
சமீபத்துல வெளியான ‘லோகா- சாப்டர் 1: சந்திரா’ படத்தை எடுத்துக்கிட்டீங்கனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தின்னு நான்கு மொழிக்கு நான்தான் டப்பிங் பண்ணினேன். இப்ப இருக்கிற ஹீரோக்கள், அவங்களே மற்ற மொழிகள்ல பேசிடறாங்க. துணை கதாபாத்திரங்களுக்கான சரியான குரலைக் கண்டுபிடிச்சு பேச வைக்கிறது ரொம்ப முக்கியம்.
பரத்தின் 50-வது படத்தை இயக்குனீங்களே... அடுத்து?
பரத், வாணி போஜன் நடிச்ச ‘லவ்’ படத்தை தயாரிச்சு, இயக்கினேன். அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைக் கொடுத்தது. அடுத்து 2 படங்களை இயக்குறேன். வித்தியாசமான கதைகளங்கள். அதுபற்றி தகவல்கள் அடுத்தடுத்து வரும். இதுக்கிடையில என்னோட ஆர்.பி.பிலிம்ஸ் சார்பா ‘கொலைச்சேவல்’ங்கற படத்தை தயாரிச்சிருக்கேன். வி.ஆர்.துதிவாணன் இயக்கி இருக்கிறார். கலையரசன், தீபா பாலு, பால சரவணன், வெங்கட், கஜராஜ் என நிறைய பேர் நடிச்சிருக்காங்க. ஷுட்டிங் முடிஞ்சிருச்சி. அடுத்த வருஷம் வெளியிடறதுக்கான வேலைகள் போயிட்டிருக்கு.