‘கருப்பு’ படம் எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை என ஆர்.ஜே.பாலாஜி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தினை இயக்கியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்படம் எப்போது வெளியீடு என்பதே தெரியாமல் உள்ளது. ‘கருப்பு’ படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருப்பது தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே டி20 உலகப் கோப்பை போட்டிகளில் தமிழ் வர்ணனையாளராக பணிபுரிந்து வந்தார் ஆர்.ஜே.பாலாஜி. நேற்று நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி வர்ணனையின் போது ஆர்.ஜே.பாலாஜி, “ரச்சின் ரவீந்திராவையே ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி ரிலீஸ் செய்துவிட்டது. ஆனால், நான் எடுத்த படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.
இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அனைத்தும் விரைவில் சரியாகும் என ஆர்.ஜே.பாலாஜிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, த்ரிஷா, அனகா மாயா ரவி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ள படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.ஜே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.