முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘சிக்மா’. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ள இப்படம், அக். 2-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் பங்கேற்றனர்.
ஜேசன் சஞ்சய் பேசும்போது, “எல்லோருக்குமே வாழ்க்கையில் ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும். அதாவது நாம் ஏதாவது ஒரு பெரிய கஷ்டத்தில் இருந்திருப்போம். அந்த நேரத்தில் நாம் ஒரு முடிவை எடுப்போம். அந்த முடிவு, மொத்த வாழ்க்கையையும் மாற்றும். அப்படியான ஒரு மனிதரின் வாழ்க்கையில் நடக்கும் கதைதான் இந்த ‘சிக்மா’ படம். அனைவராலும் இந்தப் படத்தை தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.
சந்தீப் கிஷன் பேசும்போது, “இது போன்ற படம் அரிதாகவே நடக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குநர் சஞ்சய்க்கு என் அன்பும் நன்றியும். அவருக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்திருக்கிறார். ‘சிக்மா’ ஜாலியான ஜென்-ஸீ திரைப்படம். நாம் நேசிக்கும் ஒரு விஷயத்தைப் பயமில்லாமல் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ‘சிக்மா’ படத்துக்கும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்றார்.