நடிகை மாளவிகா மோகனன்
சமீபத்தில் தனியார் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் மாளவிகா மோகனன். அப்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர், “நீங்கள் விஜய்யுடன் த்ரிஷா மாதிரி பயணிப்பீர்களா ?” என்ற கேள்வியை எழுப்பினார். அப்போதே ‘இது தேவையற்ற கேள்வி’ என்று மாளவிகா மோகனன் தெரிவித்துவிட்டார்.
இந்த வீடியோ பதிவானது இணையத்தில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக மாளவிகா மோகனன் தனது எக்ஸ் தள பதிவில், “சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினரின் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தாலும், அவர்களில் ஓரிருவர் முற்றிலும் தேவையற்றதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கமுடையதுமான, மிகவும் நாகரிகமற்ற கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்.
விஜய் எனக்குக் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தெரியும். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். மேலும், அவரை ஒரு நண்பராகக் கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவரது திரைப் பயணத்தை உற்று நோக்குவது, வியக்கத்தக்க ஓர் அனுபவமாகவே இருந்து வருகிறது.
இனிவரும் காலங்களில் ஊடகங்களுடனான கலந்துரையாடல்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட அனைவரின் நலன் கருதி, கண்ணியத்துடனும் பரஸ்பர மரியாதையுடனும் அமைந்தால் பெரிதும் வரவேற்பேன்” என்று மாளவிகா மோகனன் குறிப்பிட்டுள்ளார்.