கார்த்தி நடித்து வரும் படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் இயக்கத்தில் ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வந்தார் கார்த்தி. இதன் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. இதனால் கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. இதனை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடித்து வருகிறார்.
மேலும், கார்த்தியுடன் வேறு யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிந்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கார்த்தி – தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணி இணைந்து ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் பணிபுரிந்துள்ளது. அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தில் மீண்டும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.