தமிழ் சினிமா

‘டிமான்டி காலனி 3’ படப்பிடிப்பு நிறைவு: கோடை விடுமுறைக்கு வெளியீடு

ஸ்டார்க்கர்

‘டிமான்டி காலனி 3’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இருக்கிறது. இதனை கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

’டிமான்டி காலனி 3’ படத்தின் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை வைத்து படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தையும் அறிமுகம் செய்துள்ளது படக்குழு. இதனிடையே தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுற்றதாகவும், கோடை விடுமுறைக்கு வெளியீடு எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

          

இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறியதாவது, “தயாரிப்பாளர் சுதனிடம் கதை சொல்லி இறுதியானதும் கதையின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இருக்கக்கூடாது, அதற்காக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலவு செய்ய தயார் என சொன்னார். ’டிமான்டி காலனி’ படத்துக்கு இப்படியான தயாரிப்பாளர் கிடைப்பது பெரும் அதிர்ஷ்டம். படத்தில் பல சவால்கள் இருந்தாலும் அதெல்லாம் படக்குழுவின் ஆதரவால் எளிதாக கடந்து வர முடிந்தது.

மிகவும் திருப்தியாக மூன்றாம் பாகத்தை உருவாக்கியுள்ளோம். நடிகர் அருள்நிதி மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரால்தான் திட்டப்படி 80 நாட்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது. ’டிமான்டி காலனி’ மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதை மனதில் வைத்தே இந்த மூன்றாம் பாகமும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

‘டிமான்டி காலனி 3’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜிஎம் குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சிவகுமார் விஜயன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

SCROLL FOR NEXT