அஜித்
சென்னை: வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான நிலையில், அவர் அப்படி எதுவுமே கூறவில்லை என்று அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு இன்று காலை 7 மணிக்கு முன்பாகவே வந்தார். சிறிது நேரம் காத்திருந்த அவர், வாக்குப் பதிவு தொடங்கியதும் முதல் நபராக வாக்களித்தார்.
அஜித் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள், பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே குவிந்தனர். கூட்ட நெரிசல் அதிகரித்ததால், போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த அஜித், காரில் ஏறிச் சென்றார்.
இதற்கிடையே, வாக்களித்துவிட்டு வெளியே வந்த அஜித்திடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முயன்றனர். அப்போது, ‘மாற்றம் தேவையா?’ என்று செய்தியாளர் கேட்டதற்கு ‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் பதில் அளித்ததாக சில ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதன் தொடர்ச்சியாக, ‘மாற்றம் தேவையில்லை என அஜித் பதில் அளித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர், ‘அஜித் நல்ல கருத்துதானே கூறியுள்ளார். அவருக்கு நன்றி’ என்று பதில் அளித்தார்.
இந்நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கத்தில், ‘வாக்களித்துவிட்டு வந்த அஜித்குமார் எந்தவிதமான அரசியல் கருத்தையும் வெளியிடவில்லை. மாற்றம் தேவையில்லை என்பது போன்ற பதிலையும் அவர் கூறவில்லை. செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது, ‘பேட்டி வழங்க முடியாது’ என்ற பொருளில் அஜித் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.