தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தமிழக முதல்வர் விஜய் பிறப்பித்த உத்தரவுக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற உடன் இன்று கல்வி நிலையங்கள், ஆலயங்களுக்கு அருகில் உள்ள 717 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த அறிவிப்புக்கு
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்றில், “தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி. உங்களுடைய அரசாங்கம் இன்று எடுத்துள்ள முடிவு ஒரு மிகப் பெரிய சாதனை. கல்வி நிறுவனங்கள், ஆலயங்களுக்கு பக்கத்தில் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வாரத்தில் மூட உத்தரவிட்டுள்ளீர்கள். அதற்கு ரொம்ப நன்றி. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால், மதுபானக் கடைகளை தாண்டி தான் நிறைய பெண் குழந்தைகள் போக வேண்டியதுள்ளது. இதனை யாராவது மாற்றிவிட மாட்டார்களா என்று நிறைய முறை யோசித்துள்ளேன். இப்போது அது நடைமுறைக்கு வந்ததற்கு சல்யூட்.
இதுதான் ஒரு சாதாரண மக்களுக்கு தேவை. இதைத்தான் எதிர்பார்க்கிறோம். அரசாங்கத்துக்கு மதுபானக் கடைகள் மூலமாக ரூ.20,000 கோடிக்கு மேலாக வருமானம் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அந்த 717 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது நிறைய மக்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். பொதுமக்களுக்கு, பெண்களுக்கு, முதியோர்களுக்கு அனைவருக்கும் பெரிய வரமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது எக்ஸ் தள பதவில் விஷால், “பள்ளிகளுக்கு அருகிலுள்ள மதுபானக் கடைகளை மூடுவதாக அறிவித்ததற்கு மிக்க நன்றி. இதுவொரு சிறப்பான நடவடிக்கை.
எத்தனையோ பெண் குழந்தைகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம் ஆர்.கே. நகரில் நடந்தது. அங்கு ஒரு மாணவி, தினமும் மதுக்கடையைக் கடந்துதான் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகப் புலம்பியிருந்தார்.
அவரும், அவரைப் போன்ற எண்ணற்ற பொதுமக்களும் உங்களையும், உங்கள் முடிவையும் மனதாரப் பாராட்டுவார்கள். முதல்வரின் இந்த முடிவின் மூலம், 'மது' எனும் இந்தப் பெரும் தீமையிலிருந்து நிரந்தர விடுதலை கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார் விஷால்.