‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தனது 10-வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
இதை, சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர், அசின் ஜெயின் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவருடைய 1540-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி இளையராஜா கூறும்போது, “சினிமாவும் இசையும் எனக்கு உணர்வுப்பூர்வமானவை. ஒரு கதையின் நேர்மையும், அதை சொல்லும் மனிதர்களின் உண்மையும்தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெரிகிறது.
ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும், இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது, அந்த இசையைத் தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக உருவாகியுள்ளது” என்றார்.