மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கான புதிய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை எக்ஸ் தளத்தில் தணிக்கை வாரியத் தலைவர் சாஷி சேகர் வேம்படி பதிவிட்டுள்ளார்.
அதன்படி, திரைப்படங்களில் போதைப்பொருள், வன்முறை, பாலியல் வன்முறை, குழந்தைகளுக்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் பிற உணர்வுப்பூர்வமான விஷயங்களைச் சித்தரிப்பது தொடர்பாக, கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
போதைப்பொருட்கள் பயன்பாடு அல்லது கடத்தல் காட்சிகள் இடம் பெற்றால், கட்டாயமாக எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும். அதாவது, சட்டவிரோத போதைப்பொருட்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் சிறைத்தண்டனையைப் பெற்றுத் தரும். போதைப்பொருளுக்கு நோ சொல்லுங்கள் என்ற வாசகங்கள் இடம்பெற வேண்டும்.
மது, போதைப்பொருள் அல்லது புகையிலை பழக்கத்தை நியாயப்படுத்தவோ, மகிமைப்படுத்தவோ கூடாது; இனம், மதம் அல்லது பிற குழுக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் அல்லது வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது, அறிவியலுக்கு எதிரான அல்லது தேசவிரோத மனப்பான்மைகளை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்கள் தடை செய்யப்படுகின்றன.
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களாகவோ, வன்முறையை அரங்கேற்றுபவர்களாகவோ அல்லது வன்முறைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட சாட்சிகளாகவோ திரைப்படங்களில் குழந்தைகளைச் சித்தரிப்பதையும், குழந்தைகள் எந்த விதமான துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுவதைக் காட்டுவதையும் தவிர்க்க வேண்டும். உடல் அல்லது மனநலக் குறைபாடு உள்ளவர்களைத் துன்புறுத்துவது மற்றும் கேலி செய்வதற்கு எதிராகவும் இந்த வழிகாட்டுதல்கள் எச்சரிக் கின்றன.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலோ அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலோ காட்சிகள் இருக்கக் கூடாது. திரைப்படத் தலைப்புகள் ஆத்திரமூட்டும் வகையிலோ, ஆபாசமாகவோ, புண்படுத்தும் வகையிலோ அல்லது வழிகாட்டுதல்களை மீறும் வகையிலோ இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சமீபத்தில் மறு சிரமைப்பு செய்யப்பட்டது. பிரீத்தி ஜிந்தா, சுனில் ஷெட்டி, பங்கஜ் திரிபாதி உள்பட 18 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து திரைப்படத் தணிக்கைச் சான்றிதழுக்கானத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.