விக்ரம் நடிக்கும் படத்தினை ‘பிளாஸ்ட்’ இயக்குநர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘பிளாஸ்ட்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுபாஷ் கே.ராஜின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதல் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே, அவரது அடுத்த படத்தினையும் தயாரிக்க முன்வந்துள்ளது. பல்வேறு முன்னணி நடிகர்கள் அவருடன் பணிபுரிய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதனிடையே, விக்ரமை சந்தித்து சுபாஷ் கே.ராஜ் கதை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இணையவாசிகள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக விசாரித்தபோது, சுபாஷ் கே.ராஜ் தனது அடுத்த படத்தின் கதையினை இறுதி செய்து வருகிறார். அது முடிந்தவுடன் மட்டுமே நடிகர்களை அணுக முடிவு செய்திருக்கிறார் என்கிறார்கள்.
ஆகையால், சுபாஷ் கே.ராஜின் அடுத்த பட அறிவிப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை வதந்திகளுக்கு பஞ்சமில்லை என்பது மட்டும் உறுதி. அவரது முதல் படமான ‘பிளாஸ்ட்’ படத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான இப்படம் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது.