காந்தாரா: சாப்டர் 1
திரைப்படம் தோன்றிய காலத்திலிருந்தே, ஒரு காட்சியை பதிவு செய்வதும் அதை திரையரங்கில் மீண்டும் அப்படியே அச்சுப்பிசகாமல் திரையிடுவதும் ஒரே முறைமையில் இயங்க வேண்டும் என்ற தேவையால் அகலம் – உயரம் எனப்படும், `ஆஸ்பெக்ட் ரேஷியோ' என்ற திரைமொழி உருவானது.
இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் 16:9 என்ற வடிவம் 16 பாகம் அகலத்தையும், 9 பாகம் உயரத்தையும் குறிக்கிறது. இந்தத் தொழில்நுட்பப் பாதையை அமைத்தவர் தாமஸ் ஆல்வா எடிசனின் ஆய்வரங்கத்தில் பணியாற்றிய வில்லியம் கென்னடி டிக்ஸன் என்ற புகைப்படக் கலைஞர்.
கொடாக் நிறுவனம் செல்லுலாய்ட் ஃபிலிம் தயாரிப்பை ஆரம்பித்தபோது, அதை எடிசனின் கினடாஸ்கோப்பில் பயன்படுத்துவதற்காக 35மிமீ ஃபிலிம் அளவை நிலைப்படுத்தினர். ஒரு ஃபிரேமின் 0.95 x 0.735 இன்ச் அளவை 1:1.33 என்ற விகிதத்தில் வகுத்தனர்.
1907-ல் உருவான மோஷன் பிக்சர் காப்புரிமை ஒப்பந்தம்: 35 மிமீ ஃபிலிமை கேமரா மற்றும் புரொஜெக்டரில் செலுத்துவதற்காக ஃபிலிமின் பக்கவாட்டில் துவாரங்கள் இருக்கும். இதனை ஃபிலிம் பெர்ஃபொரேஷன் என்பார்கள். ஒரு ஃபிரேமின் அளவைக் குறிப்பதற்கு நான்கு துவாரங்களைக் கணக்கிட்டு 4-பெர்ஃப் எனப்பட்டது. இதை ஆஸ்பெக்ட் ரேஷியோ வடிவில் 1:1.33 ஃபிரேம் விகிதத்தை உருவாக்கினர்.
திரைப்படங்களில் வசனக் காட்சிகள் இடம்பெற்ற பிறகு 1932-ல் அகாடமி ரேஷியோ (1:1.37) என்ற புதிய முறை அறிமுகமானது. படத்தில் ஒலிக்குரிய பகுதி இடம் பெறுவதற்கான கட்டமைப்பே இதன் நோக்கம். 1950-களில் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டபோது, 4:3, பின்னர் 16:9 ஆகிய வடிவங்கள் பரவின.
தொலைக்காட்சியின் தாக்கத்தைக் குறைத்து திரையரங்கின் பெருமையை மீட்டெடுக்க ஹாலிவுட் திரையுலகம் அகன்ற திரை முறைகளை உருவாக்கியது. 1953-ல் ட்வெண்டியத் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் `சினிமாஸ்கோப் 2.35:1’ வடிவத்தை தி ரோப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது. அனமார்ஃபிக் லென்ஸூகள் பயன்படுத்தியதால், 35 மிமீ ஃபிலிம் கொண்டிருந்தாலும் காட்சி அகன்ற பரப்பை வழங்கியது.
1959-ல் இயக்குநர் குரு தத் இயக்கிய காகஸ் கி ஃபூல் இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் கருப்பு-வெள்ளைத் திரைப்படமாக வெளியானது. ஒளிப்பதிவாளர் வி.கே.மூர்த்தியின் சின்னச்சின்ன சோதனை முயற்சிகளுடன் உருவான இத்திரைப்படம் உலகளவில் பெரு மதிப்பைப் பெற்றது.
1970-ல் வெளிவந்த `ராஜ ராஜ சோழன்' சினிமாஸ்கோப் வடிவத்தில் வெளியான முதல் தமிழ் திரைப்படம். 1980-களின் இறுதியில் அடையார் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களின் படைப்பான ‘ஊமை விழிகள்’ வெற்றி பெற்றபின் சினிமாஸ்கோப் ஆஸ்பெக்ட் ரேஷியோ தமிழ் சினிமாவில் நிலைத்து நின்றது.
1:1.37 விகிதத்தில் உருவாக்கப்படும் திரைப்படங்கள் சினிமாஸ்கோப் திரையில் திரையிடப்படும் போது ஃபிரே மின் மேல்பகுதியும் கீழ்ப்பகுதியும் க்ராப் ஆனது. இதனை சரிசெய்ய எண்பதுகளில், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா 1:1.66 வடிவத்தை இந்தியாவில் பிரபலமாக்கினார்.
திரை வடிவம் – கதை சொல்லும் புதிய மொழி: திரை வடிவம் என்பது தொழில்நுட்பம் மட்டுமல்ல; அது ஒரு கதைசொல்லும் இலக்கணம். ஒரு கவிஞன் எப்படி செய்யுள் வடிவத்தைத் தேர்வு செய்கிறானோ, அதுபோல ஒளிப்பதிவாளர் கதைக்கேற்ப ஆஸ்பெக்ட் ரேஷியோவை தேர்வு செய்கிறார். `ஜூராஸிக் பார்க்' திரைப்படத்தில் டைனோசர்களின் உயரத்தைக் காட்ட 1:1.37 முறையை தேர்வு செய்தனர்.
இருவர்...
இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பர்க், இந்தப் படத்தில் டைனோசர்களின் பரிமாணம், அவற்றின் ஹைட் டாமினன்ஸ், மனிதர்களின் கையறு நிலை ஆகியவற்றை வலுப்படுத்த அகாடமி ரேஷியோ (1:1.37) வை திட்டமிட்டுப் பயன்படுத்தினார்.
அகன்ற சினிமாஸ்கோப்பில் காட்டினால் டைனோசர்களின் உயரம் குறைந்து தெரியும்; ஆனால் 1:1.37 போன்ற செங்குத்து விகிதத்தில் ஃபிரேம் அமைக்கும்போது, அவற்றின் உயரம் நேரடியாகப் பாய்ந்து வந்து பயத்தை உருவாக்கும். ஆஸ்பெக்ட் ரேஷியோ ஒரு கதையின் உணர்வை எந்த அளவுக்கு மாற்றக் கூடிய தென சுட்டிக்காட்டும் மிகச்சிறந்த உதாரணம் இது.
இருவர் – அரசியல் வரலாற்றின்: காலத்தைக் காட்ட க்ளாசிக் ரேஷியோ இயக்குநர் மணிரத்னத்தின் ‘இருவர்’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், 60-களில் அரசியல் தலைவர்களின் வரலாற்றுக் காட்சி மொழியை பிரதிபலிக்க க்ளாசிக் ஆஸ்பெக்ட் ரேஷியோவான 1:1.37 வை பயன்படுத்தினார்.
அகன்ற ஃபிரேமை விட, சுருக்கமான க்ளாசிக் ரேஷியோ அந்தக் காலத் திரைப்படங்களின் விஷுவல் ஸ்டைலை பார்வையாளர்களுக்கு துல்லியமாக நினைவூட்டுகிறது. இதனால் படத்தின் முழுக் கதையுமே ஒரு வரலாற்றுப் பதிவைப் போல உணர்த்துகிறது.
காந்தாரா: சாப்டர் 1 - இரண்டு உலகங்களின்: மோதலைக் காட்ட ‘மிக்ஸ்ட் ஃபார்மட்ஸ்’ `காந்தாரா: சாப்டர் 1' படத்தில் ஒளிப்பதிவாளர் அரவிந்த கஷ்யப், கதையின் இரு உலகங்களையும் - இயற்கை (பக்தி, நாட்டார் புராணம்) மற்றும் நவீன வாழ்க்கை (சட்டம், மனிதர்கள்) ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஒரே திரைப்படத்தில் சினிமாஸ்கோப் (2.39:1) மற்றும் 1.85:1 ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்தினார்.
காடுகள், பூஜை, தெய்வக்காட்சிகள் போன்ற பகுதிகளில் அகன்ற ஃபிரேமையும், கிளைமாக்ஸ் காட்சிகளின் உணர்ச்சி மோதல்கள் இடம்பெறும் இடங்களில் 1.85:1 முறையையும் பயன்படுத்தினார். இந்த ஆஸ்பெக்ட் ரேஷியோ கதைக்குப் பொருத்தமான மனநிலையை எப்படி மாற்றுகிறது என்பதை நிரூபிக்கும் சமீபத்திய உதாரணம்.
திரை வடிவங்கள் – தொடர்ந்த பரிணாமம்: 35மிமீ ஃபிலிம் வடிவம் உட்பட 1:1.85, சூப்பர் 35, சினிமாஸ்கோப், ஐமேக்ஸ் டிஎம்ஆர் ஆகிய வடிவங்கள் தொடர்ச்சியாக வளர்ந்து வந்துள்ளன. அதே நேரம் 8மிமீ, 16மிமீ, 70மிமீ போன்ற ஃபிலிம் காஜஸ் தங்கள் துறைசார்ந்த இடத்தில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன.
70 மிமீ வடிவத்தில் பென்ஹர், லாரன்ஸ் ஆஃப் அரேபியா, போன்ற மாபெரும் படங்கள் உலக திரை அனுபவத்தை மாற்றியமைத்தன. 2008 முதல் ஐமேக்ஸ் 70 அடி அகல, 50 அடி உயரத் திரையில் 6 மடங்கு ரெசல்யூஷன் தரத்துடன் பெரும் காட்சி அடர்த்தி உருவாக்கி, முழுமையாக டிஜிட்டல் யுகத்துக்கு மாறியது.
இன்றைய உலகில்,
2.39:1 – டிஜிட்டல் சினிமா வைட் ஃபார்மட்
1.85:1 – டிராமா / இண்டி ஃப்லிம்ஸ்
16:9 - ஓடிடி, யூட்யூப், தொலைக்காட்சி
1:1 – சமூக வலைதளங்கள், வெர்டிகல் கதை சொல்லல்
1:1.40 – ஃபிலிம் ஐமேக்ஸ் / 1:1.90 டிஜிட்டல் ஐமேக்ஸ்- என்ற திரை வடிவங்களே இன்று பிரபலமாக உள்ளன.
திரை வடிவம் – காட்சியின் கலைமொழி: ஆஸ்பெக்ட் ரேஷியோ என்பது ஒரு எண் அல்ல. அது காட்சியின் அளவுகோல். திரையரங்கில் பார்வையாளருக்கு மிகச்சிறந்த அனுபவத்தை கொடுப்பது திரை வடிவங்களே. ஷோலே, மெக்கனாஸ் கோல்ட், ஹேட்ஃபுல் எய்ட் ஆகிய பழைய திரைப்படங்களை 70 மிமீ வடிவத்துக்காகவும் சமீபத்திய கிறிஸ்டோஃபர் நோலனின் திரைப்படங்களை ஐமேக்ஸ் வடிவத்துக்காகவுமே பார்வையாளர்கள் திரையரங்குக்குச் சென்றனர்.
(புதன் தோறும் ஒளிகாட்டுவோம்)
- cjrdop@gmail.com