மலையாள சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் திக்குரிசி சுகுமாரன். சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் அவர், வாங்கியிருக்கும் விருது பட்டியலே மீக நீளமானது. சில படங்களை இயக்கியும் உள்ள அவர் நடித்து, தமிழ், மலையாளத்தில் உருவான படம், ‘அம்மா’. அம்மாவின் தியாகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான இப்படத்தைத் தயாரித்தவர் டி.இ.வாசுதேவன். இவர், அப்போது தமிழ்ப் படங்களை, தனது அசோசியேட்டட் பிக்சர்ஸ் சார்பில் கேரளாவில் விநியோகித்து வந்தார்.
அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சில தயாரிப்பாளர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் உதவியுடன் தயாரிப்பாளர் ஆக முடிவு செய்தார், வாசுதேவன். அப்படி அவர் தயாரித்த முதல்திரைப்படம், ‘அம்மா’. கே.வேம்பு இயக்கினார். திக்குரிசி சுகுமாரன் ஹீரோவாக நடித்த இப்படத்தில் திருவிதாங்கூர் சகோதரிகளில் ஒருவரான, லலிதா நாயகியாக நடித்தார். அப்போது தமிழிலும் லலிதா பிரபலமானவராக இருந்ததால் தமிழிலும் படத்தை உருவாக்கினர். அம்மாவாக ஆரன்முளா பொன்னம்மா நடித்தார்.
லட்சுமி (ஆரன்முளா பொன்னம்மா) தனது மகன் வேணு (திக்குரிசி), மகள் சாரதா (பி.எஸ்.சரோஜா) ஆகியோரை வளர்க்கப் பொருளாதார ரீதியாகப் போராடுகிறார். மேற்படிப்புக்காக சென்னை செல்லும் மகன் வேணு, பணக்கார தொழிலதிபரின் மகள் ராதாவை (லலிதா) காதலிக்கிறார். படிப்பை முடித்துவிட்டு திரும்பும் வேணு, அம்மாவிடம் தனது காதல் கதையை சொல்கிறார்.
சமூக அந்தஸ்தை காரணம் காட்டி மறுக்கும் லட்சுமி, ஒரு கட்டத்தில் மகனுக்காக ராதாவின் வீட்டில் பெண் கேட்கிறார். ராதாவின் பணக்காரத் தந்தை அவமானப்படுத்துவதால், மனம் உடைகிறார். இதற்கிடையே, ராதாவும் வேணுவும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்கிறார்கள். லட்சுமி, அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்.
வேணுவுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது. கிராம வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் ராதாவும் சென்னை செல்கிறார். மகனின் படிப்பு செலவுக்காக வாங்கிய கடனுக்காக வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார், லட்சுமி. சென்னைக்கு வரும் அவரை, ராதா மோசமாக நடத்துகிறார். அஙகிருந்தும் வெளியேறும் லட்சுமி, சாலை விபத்தைச்சந்திக்கிறாள். வேலை செய்யும் இடத்தில் மகனுக்குத் திருட்டுப் பட்டம் கிடைக்கிறது. பிறகு அம்மா என்ன மாதிரியான தியாகங்களைச் செய்கிறார் என்று கதை போகும்.
அம்மா சென்டிமென்டை ஆழமாகச் சொன்ன திரைப்படம் இது. கதை எதார்த்தத்தில் இருந்து விலகினாலும் சுவாரஸ்யமாக இருப்பதாக அப்போது விமர்சிக்கப்பட்டது. இதில் எம்.என்.நம்பியார், டி.எஸ்.துரைராஜ், டி.எஸ்.முத்தையா, பி.எஸ்.சரோஜா, சாந்தகுமாரி என பலர் நடித்தனர். தமிழ் வசனங்களை, எழுத்தாளர் சாண்டில்யன் எழுதினார்.
2 மொழிக்கும் வி.தட்சிணாமூர்த்தி இசை அமைத்தார். மொத்தம் 14 பாடல்கள். இதில் பெரும்பாலானவற்றில் இந்தி சாயல் இருந்ததாகக் கூறப்பட்டது. இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி இப்படம் மூலம் பின்னணிப் பாடகராகவும் அறிமுகமானார்.
இதில், ஆரன்முளா பொன்னம்மாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. 1952-ம் ஆண்டு இதே தேதியில் (டிச.6) வெளியான இப்படம் தமிழ், மலையாளத்தில் வரவேற்பைப் பெற்றது.