பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 94.
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த சவுகார் ஜானகிக்கு சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் புதன்கிழமை இரவு அவர் உடல் நிலை மோசமானது. செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார்.
அவர் மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். சவுகார் ஜானகியின் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கட்ரமணா, பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் டி.ஜெயக்குமார், நடிகர்கள் சத்யராஜ், சிவகுமார், நாசர் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், நேற்று மாலை சவுகார் ஜானகி உடல் வீட்டில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.