நடிகை சவுகார் ஜானகி
சென்னை: உடல்நலக்குறைவால் நடிகை சவுகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு வயது 94.
ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணத்தில் கடந்த 1931-ல் டிசம்பர் 12-ம் தேதி அவர் பிறந்தார். கடந்த 1950 முதல் அவரது திரை பயணம் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் சுமார் 400+ திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
தமிழில் கடந்த 1952- வெளியான ‘வளையாபதி’ தான் அவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம். தமிழில் பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர் நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், காவிய தலைவி, ரங்க ராட்டினம், தில்லு முல்லு, வெற்றிவிழா, ஹேராம் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். திரைத்துறையில் அவரது பணியை போற்றும் வகையில் கடந்த 2022-ல் பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது. பிலிம்பேர் விருது மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் அவர் வென்றுள்ளார். சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘பிஸ்கோத்’ படம் தமிழில் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம்.