நடிகர் விஜய் சேதுபதி
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ‘சீதக்காதி’ படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன், அடுத்து இயக்கி இருக்கும் படம் ‘பத்தா’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இதில், லிஜோமோல் ஜோஸ், சபரி உள்பட பலர் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்துக்கு செல்வகுமார் எஸ்கே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டார் ஸ்டூடியோ 18, இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டூடியோ புரொடக் ஷன் இணைந்து தயாரித்துள்ளது. அக். 1-ல் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினர் கலந்துகொண்ட இவ்விழாவில் விஜய் சேதுபதி பேசும்போது, “பாலாஜி தரணிதரன் மாதிரி ஒருவர்தான் இதுபோன்ற கதையை எழுத முடியும். அவர் எனக்கு நெருக்கமானவராக இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். இது எந்த மாதிரியான படம் என்று நிறைய கேள்விகள் இருக்கலாம். ஒரு பக்கம் விருது வாங்கும் என்று சொல்கிறோம், மறுபக்கம் தியேட்டரில் கலெக் ஷன் பார்க்கும் என்றும் சொல்கிறோம்.
‘அதெப்படி விருது வாங்கும் படம் கலெக் ஷன் பண்ணும்?’ என்ற கேள்விகள் இருக்கலாம். இந்த கேள்விகளுக்கு இந்தப் படம் பதில் சொல்லும்” என்றார். பின்னர் கேள்விகளுக்குப் பதிலளித்த அவரிடம் முதல்வர் விஜய் பற்றி கேட்கப்பட்டது.
அவர் கூறும்போது, “ஜேசன் சஞ்சய் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லி இருந்தேன். இதற்காக விஜய் எனக்கு போன் செய்து ‘நண்பா’ அவன் ரொம்ப சந்தோஷப்பட்டான்’ என்றார். நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் அவர் பெரிய சூப்பர் ஸ்டார். சஞ்சய்க்கு என்னைப் பிடித்திருப்பதும் பெரிய ஆச்சரியம். நான் சஞ்சயிடமே ‘உங்கள் வீட்டில் எவ்வளவு பெரிய நடிகர் இருக்கிறார்’ என்றேன்.
நான் சஞ்சயின் ‘சிக்மா’ படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று இருந்தேன். என் நண்பர் ரோஹன், ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். நான் சஞ்சயின் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றிருந்ததை அறிந்த விஜய், ரோஹன் மூலமாக எனக்கு அன்பான அரவணைப்பை அனுப்பினார். நான் கொடுத்ததாகச் சொல்லி இதை அவரிடம் கொடுங்கள் என்று கூறி அனுப்பி இருந்தார். அவருடைய அந்த செயல் மிகவும் இனிமையானதாகவும், கனிவானதாகவும் இருந்தது” என்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், தற்போது அவர் முதல்வர் விஜய் குறித்து பேசிய கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.