நடிகர் சூரி, இப்போது ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மதிமாறன் புகழேந்தி இயக்கும் இதில் மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்பட பலர் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மீனவர்களின் படகு ரேஸை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர், நடிகர் சூரியை டேக் செய்து, “உங்கள் பட ஷூட்டிங் எங்கள் ஊரில் நடப்பது மகிழ்ச்சி. இரவு நேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களிடம், உங்கள் பவுன்சர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள சூரி, “உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதைத் தயாரிப்புக் குழுவிடமும், பவுன்சர் சகோதரர்களிடமும் தெரிவித்து மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம்.
எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம்” என்று பதிவிட்டுள்ளார். சூரியின் இந்த பண்பை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.