கேரள அரசின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் நல்லெண்ணத் தூதராக தமிழ்த் திரைப்பட நடிகர் பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான பேட்ஜை அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா அவருக்கு அணிவித்தார்.
இந்தத் தகவலை அமைச்சர் சென்னிதாலா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அமைச்சர், ‘வரலாற்று சிறப்புமிக்க ‘பைபாட் படகு’ போட்டி பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரபல தென்னிந்திய நடிகர் பிரசாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர், மாநிலத்தின் பெருமைமிகு முன்னெடுப்பான ‘ஆபரேஷன் டூஃபான்’-ன் (Operation Toofan) (போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை) முன்னணி களப்பணியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கான பேட்ஜ் அணிவிக்கப்பட்டு, அவர் கவுரவிக்கப்பட்டார்.
இந்தப் போட்டியானது உள்ளூர் விளையாட்டு சமூகத்துக்கு மட்டும் இல்லாமல், இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு முயற்சிகளுக்கும் வலுசேர்ப்பதாக உள்ளது.
பைபாட் படகு போட்டியில் கலந்து கொள்ளும், படகோட்டிகள் படகு குழுக்கள், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் போட்டி நமது விளையாட்டு கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
‘ஆபரேஷன் டூஃபான்’ என்பது கேரள மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கடத்தலை வேரறுக்கவும், போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் மாநில அரசும் காவல் துறையும் இணைந்து தொடங்கிய முன்னெடுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.