நான் நடித்த பட்டாபி கதாபாத்திரத்துக்கான காரணகர்த்தாக்களாக மூன்று பேரை சொல்லியிருந்தேன். பலசாலியான குப்பப்பா ஒருவர் என்றால், இன்னொருவன் அப்பாவித்தனமான என் நண்பன் கோபி.
ராயப்பேட்டை அம்மையப்ப முதலி தெருவில், எங்கள் வீட்டிலிருந்து பத்து வீடு தள்ளி இருந்தது, கோபியின் வீடு. எப்போதும் என்னுடன்தான் இருப்பான் கோபி. அவ்வளவு நெருக்கமான நண்பன்.
அவனுடைய தந்தை வெங்கட்ராமன், மவுண்ட் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். காலையில் எங்கள் வீட்டை அவர் தாண்டிச் செல்கிறார் என்றால், மணி ஏழே கால் என்று அர்த்தம்.
அந்த நேரத்தை அவர் எப்படிச் சரியாகத் தொடர்கிறார் என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் அப்படியே நடந்து பழைய ஓடியன் தியேட்டர், மிட்லண்ட் தியேட்டர் வழியாக சென்று மவுண்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்துக்கு செல்வார்.
மாலையிலும் சரியாக ஆறரை மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவார். கோபியின் அம்மா கற்பகம். என் வீட்டில் அம்மாவோ, அப்பாவோ, அல்லது நாங்கள் குடும்பமாக எங்காவது வெளியில் கிளம்புகிறோம் என்றால், “டேய் போய் கற்பகம் மாமியை கூட்டிட்டு வாடா... எதிர்ல வரச்சொல்லு” என்பார்கள்.
அவர் எதிரில் வந்தால் செல்லும் காரியம் நன்றாக நடக்கும் என்பதும் நல்ல சகுனம் என்பதும் அவர்கள் நம்பிக்கையாக இருந்தது. கற்பகம் மாமிக்கு கொதிக்கும் வெயிலாக இருந்தாலும் செருப்பு போடத் தெரியாது. செருப்பு அணிந்தால் ஒரு கால் கீழ்ப்பக்கமும் ஒரு கால் மேல் பக்கமும் போகும். அவர்களுக்கு நான்கு மகன்கள், ஒரு மகள்.
அதில் ஒரு மகனான கோபி என் நெருக்கமான நண்பன். எப்போதும் எங்கள் வீட்டில்தான் இருப்பான். பல நாட்கள் இரவுகளில் ஒன்றாக, ஒரே கட்டிலில் தூங்கியிருக்கிறோம். பள்ளியில் படிக்கும் போது அவன் சிறந்த கால்பந்து வீரன்.
அதே போல கேரம்போர்டும் அருமையாக விளையாடுவான். நானும் அவனும் வீட்டின் பின் பகுதியிலிருந்த அறையில் கேரம்போர்டு விளையாடுவோம். நான் 23 பாயின்ட்ஸ் எடுத்திருந்தால், அவன் 28 பாயின்ட்ஸ் எடுத்திருப்பான். அவன் 23 பாயின்ட்ஸ் எடுத்திருந்தால் நான் 28 எடுத்திருப்பேன்.
யார் ரெட் அண்ட் ஃபாலோ போட்டாலும் ஆட்டம் முடிந்துவிடும். அவன் ரெட் போட்டுவிடுவான். ஃபாலோ காயின் போடும்போதுதான், தலைமைச் செயலகத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த என் தம்பி வீட்டுக்குள் வருவான். அவனைப் பார்த்ததும் கோபிக்குக் கொஞ்சம் பதற்றம் வரும்.
ஃபாலோ போடும் நேரத்துக்கு என் தம்பி வேண்டுமென்றே ‘அச்’சென்று பலமாக தும்முவான். அந்த ஜெர்க்கில் ‘பாலோ காயின்’ உள்ளே போகாமல் வெளியே வந்துவிடும். கோபி அவனை முறைப்பான்.
பிறகு நான் ரெட் எடுத்து வைத்து போடுவேன். அடுத்து ‘ஃபாலோ’ போடும்போது, என்னை, “கொஞ்சம் வெயிட் பண்ணு” என்பான் கோபி. என் தம்பியைப் பார்த்து, “இப்ப தும்மேண்டா’ என்பான் கோபி! ‘எனக்கு வரலை மாமு” என்பான் என்தம்பி! “அதெப்படிடா? மத்தவன் விளையாடும் போது வர்ற தும்மல் சொந்த அண்ணன் விளையாடும் போது வரமாட்டேங்குது?” என்று கேட்பான் கோபி.
இப்படி கூத்தும் கும்மாளமுமாக கழிந்த காலங்கள் அவை. அவனுடைய அப்பாவித்தனத்துக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நாள் மளிகைக் கடையில் பெரிய சண்டை. “மரியாதையா கொடு, என்னை ஏமாத்தலாம்னு நினைக்கிறியா?” என்று கடைக்காரரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
கடைக்காரப் பையன், “அப்படிலாம் கம்பெனியில கொடுக்கலையே?” என்று சொல்லிக் கொண்டிருந்தான். “டி.வி-யில தினமும் பலவாட்டிச் சொல்லிட்டிருக்கான், ஏமாத்தறீங்களா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான். நான் அவன் சண்டையிடுவதைப் பார்த்து, “என்னென்னு சொல்லுடா, நான் வாங்கித் தரேன்’ என்றேன். அவன், “நீ தலையிடாத, உன் வேலையை பாரு” என்று சொல்லி விட்டான்.
கடைக்காரனுக்கும் ஒன்றும் புரியவில்லை. டி.வி விளம்பரத்தில், “வாங்கிடுவீர் கோல்கேட், பெற்றுடுவீர் பாதுகாப்பு வளையத்தை” என்று சொன்னதில், அவன் பாதுகாப்பு வளையத்தை கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தது பிறகுதான் தெரிந்தது. அவனுக்கு அதை விளங்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது எனக்கு. அவ்வளவு அப்பாவி.
எனக்கு ‘டைபாய்டு’ வந்த நேரத்தில் இரவு பகலும் என்னுடன்தான் இருந்தான்! எப்போதும் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்போம். அங்குள்ள செவிலியர்கள், “நீங்க பேஷன்ட் மாதிரி தெரியலையே, ஜாலியா டூர் வந்த மாதிரி சிரிச்சிட்டு இருக்கீங்களே?” என்பார்கள்.
அந்த மாதிரி ஓர் அருமையான, அப்பாவி நண்பன். அவனுடைய அப்பாவித்தனத்துக்கு நிறைய உதாரணம் சொல்ல முடியும். இவனிடம் இருந்துதான், பட்டாபி கதாபாத்திரத்துக்கான அப்பாவித்தனத்தை எடுத்துக் கொண்டேன்.
இப்போது விருகம்பாக்கத்தில் இருக்கிறான், எழுபத்தி மூன்று வயதாகிறது அவனுக்கு. உடல் உபாதைகளால் அவனுக்கு சில நினைவுகள் தப்பிவிட்டன. சமீபத்தில்தான் அவனைப் பார்த்து, பழைய விஷயங்களைப் பேசி, சிரித்து மகிழ்ந்துவிட்டு வந்தேன்.
( திங்கள்தோறும் பேசுவோம் )