நலன் குமரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத் உள்பட பலர் நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் பற்றி நடிகர் கார்த்தி கூறும்போது, “பெரிய கொண்டாட்டமாக கடந்த வருடம் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டோம். அது தள்ளிப்போய்விட்டது. எனது முதல் படமும் இது போல தள்ளிப்போனது. அடுத்தப் படம் தள்ளிப் போனது. அதனால் தாமதம் என்பது எங்களுக்கு புதுசு இல்லை; பழகிவிட்டது.
சின்ன வயதில் என் அப்பா, ஒவ்வொரு அரிசியிலும் யார் பெயர் எழுதப்பட்டு உள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும் என்பார். அதுபோல் சினிமாவில் ஒவ்வொரு ஃபிரேமிலும் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் கிடைக்கும். இது அப்போது புரியவில்லை, இப்போது புரிகிறது.
இயக்குநர் நலன் எல்லோருக்கும் பிடித்த இயக்குநர். அவர் இந்த கதையை கொண்டு வந்தபோது, எனக்கு பயமாக இருந்தது. இந்த கேரக்டருக்கு ஒரு தனி பயிற்சி வேண்டும். ஆனால் நான் பயிற்சி எடுக்கவில்லை. படப்பிடிப்பு தளத்தில் கற்றுக்கொண்டேன், மிகவும் சின்சியராக பண்ண முயற்சி செய்துள்ளேன்.
ஒவ்வொரு நாளும், எம்.ஜி.ஆர். சாரின் படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்து, அவரின் முகத்தை திரையில் கொண்டு வந்துள்ளேன். எம்.ஜி.ஆர் திரையில் மட்டுமில்லை, நிஜத்திலும் ஹீரோவாக இருந்திருக்கிறார். அதை மாடர்னாக ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படமாக செய்தது பெரிய விஷயம். குழந்தைகளோடு, குடும்பமாக, சேர்ந்து பார்த்து ரசிக்கும் ஜாலியான படமாக இது இருக்கும்” என்றார்.