தமிழ், தெலுங்கு, மலையாளம் திரை உலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் நடிகர் நாசர். நாசருக்கு 3 தம்பிகள். அதில் ஒருவர் ஜவஹர்.
இவர் 1990களில் ஒளிப்பதிவாளர் அப்துல் ரெஹ்மானிடம் இதயம், கிழக்கு வாசல், சிங்காரவேலன் போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணிபுரிந்ததோடு சொந்தமாக வியாபாரமும் செய்து வந்துள்ளார். சில வருடங்கள் முன்பு சென்னை திரும்பியவர் பட வாய்ப்புகளை தேடி தீவீரமாக அலைந்துள்ளார். அதன்படி, ஜி.வி 2, பனிவிழும் மலர்வனம் போன்ற படங்களில் வாய்ப்பு கிடைக்க அதில் நடித்து பாராட்டுகளையும் பெற்றார்.
தற்போது விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடித்துள்ளார் ஜவஹர். இதில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ் வாய்ப்பு அளித்ததுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜவஹர், "நான் என்ன கதாபாத்திரம் ஏற்றுள்ளேன் என்பதை சொல்ல முடியாது. இப்படத்துக்காக காஷ்மீரில் 40 நாட்கள் தங்கி இருந்தேன். எனது பகுதி சுமார் 15 நாட்கள் படமாக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அண்ணன் நாசர் ஆரம்பகால கட்டங்களில் படங்களில் வில்லனாக நடித்து வந்தார். அதேபோல் நீங்களும் வில்லன் வேடம் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, "அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. கிடைக்கும் அனைத்து பாத்திரங்களையும் செய்ய தயாராக உள்ளேன்" எனத் தெரிவித்தார்.