தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்: காவல்துறை ஆணையரிடம் புகார்

ஸ்கிரீனன்

'பிக்பாஸ்' நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று காவல்துறை ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.

அவர்கள் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

இந்திய மக்கள் மானமே முக்கியம் எனும் கொள்கை உடையவர்கள், இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் தொடர்ந்து சினிமா, டி.வி. நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இதன் உச்சக்கட்டமாக பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் எவ்வித தொடர்பு இல்லாத ஏழு ஆண்களும், ஏழு பெண்களும் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும், நடித்தும் வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சியை பார்த்து வரும் சூழலில் இது போன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்க செய்யும்.

தமிழர்கள் உயிரைவிட மேலாக மதித்து போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கூட கிண்டலடிக்கும் காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது. இது ஏழு கோடி தமிழர்களின் மனதையும் புண்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும், அந்நிகழ்ச்சியில் நடிக்கும் நமீதா, ஓவியா, காயத்ரி ரகுராம், ஜூலி, ஆர்த்தி, ரைசா, கஞ்சா கருப்பு, வையாபுரி, சக்தி, அருள், தரணி, சினேகன், கணேஷ் உள்ளிட்ட 14 பேரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை காப்பாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளது இந்து மக்கள் கட்சி.

SCROLL FOR NEXT