ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படத்துக்கு 'ஸ்பைடர்' என்று தலைப்பிட்டுள்ளார்கள்.
'அகிரா' இந்தி படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது.
தாகூர் மது, பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார். ராகுல் ப்ரீத் சிங், ஆர்.ஜே.பாலாஜி, பரத் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார் மகேஷ்பாபு. முதல் முறையாக இப்படத்துக்கு தமிழிலும் டப்பிங் பேசவிருக்கிறார் மகேஷ்பாபு. சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடைபெற்று வந்த இப்படத்துக்கு 'ஸ்பைடர்' என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதே தலைப்போடு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இப்படம் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.