கோபி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு 'அறம்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' கதை தன்னுடையது என்று புகார் தெரிவித்தவர் கோபி. அப்பிரச்சினை இப்போதும் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றை தயார் செய்ய, அதில் நயன்தாரா நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படத்துக்கு பெயர் வைக்காமலே ராமநாதபுரத்தில் இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன.
'அறம்' என இப்படத்துக்கு தலைப்பிட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த அறிவிப்பை, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உடன் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோட்பாடி ஜெ ராஜேஷ் தயாரித்து வரும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் லால்குடி இளையராஜா என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
நயன்தாராவுடன் 'காக்கா முட்டை' சகோதரர்கள் விக்னேஷ் - ரமேஷ், வேல. ராமமூர்த்தி, 'முண்டாசுப்பட்டி' ராமதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.