பிரதீப் ரங்கநாதன் 
தமிழ் சினிமா

“நான் நட்சத்திரம் இல்லை... உங்களில் ஒருவன்!” - ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் இளம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் திரைத் துறையில் அறிமுகமமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ளார். படத்தில் இவானா, ராதிகா, சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் ஏராளமானோர் தங்கள் நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில், ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன்.

“இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும், நள்ளிரவு காட்சிகளும், தியேட்டர் ஆக்கிரமிப்பும், அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று திங்கட்கிழமை. ஆனாலும், பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆவதையும், குடும்பங்கள் வருவதையும், ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன். தமிழ்நாட்டிற்கு வெளியிலும் இதே நிலை இருக்கிறது. பெங்களூரு, கேரளா, மலேசியா போன்ற இடங்கள்.

நான் நட்சத்திரம் இல்லை, உங்களில் ஒருவன். நீங்கள் என் மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக, என்னை கை தூக்கிவிட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது. நன்றி. என்னை நம்பியதற்கு அகோரம் அவர்களுக்கு நன்றி.

நீங்கள் சிரிப்பதையும், கொண்டாடுவதையும், தியேட்டர் கதவுகளின் ஓரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். அதுவே, எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. உங்களின் முகத்தில் மிளிரும் சந்தோஷமே எனக்கு சந்தோஷம். அதுவே நான் விரும்பியது, தியேட்டர்களில் சத்தமும், மகிழ்ச்சியான முகங்களும். நன்றி.

நீங்கள் என்னை நேசிப்பதையும், என்மீது அக்கறை கொள்வதையும், ஆதரவு அளிப்பதையும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதையும், மேலும் மிகவும் நேசிக்கிறேன் என்பதையும் மட்டும் இப்போது தெரிவித்துக்கொள்கிறேன்” அபரித அன்புடன் பிரதீப் ரங்கநாதன்.

SCROLL FOR NEXT